திரைப்பட பாடல்கள் யாருக்கு சொந்தம்? X-ல் இளையராஜாவை சீண்டிய வைரமுத்து?
கண் சிவந்தால் மண் சிவக்கும் என்ற பாடல் மூவருக்கு மட்டுமல்ல உழைக்கும் தோழர் ஒவ்வொருவருக்கும் சொந்தம் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக வைரமுத்து, இளையராஜா சம்பந்தமான பிரச்சனைகள் தான் சோஷியல் மீடியா முழுக்க ஹாட் டாபிக்காக உள்ளது. இந்த மாதிரியான சூழ்நிலையில் நேற்றைய தினம் வைரமுத்துவை எச்சரிப்பதை போன்று இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரன் பேசியது பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
மே தினத்தையொட்டி கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "உழைப்பு, காதல், பசி இந்த மூன்றுமே மண்ணுலகை இயக்கும் மகா சக்திகள் என்று குறிப்பிட்டுள்ளார். தூக்குக் கயிற்றுக்குக் கழுத்து வளர்த்தவர்களும், குண்டுகள் குடைவதற்காக நெஞ்சு நீட்டியவர்களும் வீர வணக்கத்துக்கு உரியவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தச் சிறப்பு நாளுக்கு ஒரு சிவப்புப் பாடலைக் காணிக்கை ஆக்குவதாகக் கூறியுள்ள வைரமுத்து, தனது எழுத்தில், இளையராஜா இசையில், ஜேசுதாஸ் குரலில் வெளியான பாடலையும் பகிர்ந்துள்ளார்.
இந்தப் பாட்டு இந்த மூவருக்கு மட்டுமல்ல உழைக்கும் தோழர்
ஒவ்வொருவருக்கும் சொந்தம் என்றும் வைரமுத்து கூறியுள்ளார். தான் இசையமைத்த பாடல்களுக்கு இளையராஜா காப்புரிமை கோரி வரும் நிலையில், ஒரு பாடலில் இசை பெரியதா, மொழி பெரியதா என்று வைரமுத்து வினவியிருந்தார். இதற்கு இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் கண்டனம் தெரிவித்த நிலையில், வைரமுத்து இவ்வாறு பதிவிட்டிருப்பது பேசுபொருளாகி உள்ளது.