For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஸ்டிரைக்கில் போக்குவரத்து தொழிலாளர்கள்..!! முதல் வழக்காக விசாரிக்கும் உயர்நீதிமன்ற கிளை..!!

08:23 AM Jan 10, 2024 IST | 1newsnationuser6
ஸ்டிரைக்கில் போக்குவரத்து தொழிலாளர்கள்     முதல் வழக்காக விசாரிக்கும் உயர்நீதிமன்ற கிளை
Advertisement

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலைநிறுத்தம் செய்ய இருப்பதாகக் கடந்த டிசம்பரில் நோட்டீஸ் வழங்கியிருந்தனர். மேலும், போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், அரசு சார்பில் இன்னும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தவில்லை. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தியிருந்தனர்.

Advertisement

இதற்கான முத்தரப்பு பேச்சுவார்த்தை கடந்த டிசம்பர் 27ஆம் தேதியும், ஜனவரி 3ஆம் தேதியும் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை. மேலும், தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் போராட்ட அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதன்படி, ஜனவரி 9ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தன.

தொடர்ந்து சென்னை பல்லவன் இல்லத்தில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் தொழிற்சங்க பிரதிநிதிகள் உடனான பேச்சுவார்த்தை கூட்டம் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுமுகமான முடிவுகள் எட்டப்படாததால் பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், திட்டமிட்டபடி போக்குவரத்து ஊழியர்கள் நேற்று (ஜனவரி 9) முதல் வேலை நிறுத்தத்தை துவங்கினர். ஆனால், தொ.மு.ச. உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களின் ஊழியர்கள் பங்கேற்காததால், அவர்களை வைத்து தமிழ்நாடு முழுக்க பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் மட்டும் அனைத்து பேருந்துகளும் இயங்க, தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் குறிப்பிட்ட அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், பொதுமக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை ஐகோர்ட் கிளையின் நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், ”தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையிலும், பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையிலும் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த அறிவிப்பு என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவிப்பது சட்ட விரோதம். வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற கிளையில் முதல் வழக்காக விசாரிக்கப்பட இருக்கிறது.

Tags :
Advertisement