அச்சுறுத்தும் ஜிகா வைரஸ் பாதிப்பு...! அனைத்து மாவட்டங்களுக்கும் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு...!
ஜிக்கா வைரஸ் பாதிப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிர படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் 8 பேருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஜிக்கா வைரஸ் கருவுற்றப் பெண்களை அதிகம் பாதிக்கும் என்பதால், அவர்களிடம் தொற்று உள்ளதா என்பதைக் கண்காணிக்குமாறு மருத்துவ நிறுவனங்களை மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் என்றும், மத்திய அரசு வழிகாட்டுதல்கள்படி, கருவில் உள்ள குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று உள்ளதா என்பதையும் கண்டறிய வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் ஜிகா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இது தொடர்பாக அரசு தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்தியாவில் ஏ.டி.எஸ். கொசு மூலம் ஜிகா வைரஸ் பரவல் ஏற்படுகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளும் ஜிகா வைரஸ் பரவலை தடுக்க மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த வைரஸ் அதிக அளவில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளை பாதிக்கக் கூடும் என்பதால் அனைத்து மகப்பேறு மருத்துவமனைகளிலும் ஒரு கண்காணிப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். கர்ப்பிணிகள் தொற்றுநோய் பரிசோதனை மற்றும் கரு வளர்ச்சியை கண்காணிப்பதில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். 'ஏ டி எஸ்.' கொசுப்புழு உற்பத்தி ஆகாத வகையில் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை பராமரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு, சிக்குன்குனியா போன்று ஜிக்கா என்பது ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் வைரல் நோயாகும். இது உயிருக்கு ஆபத்தானது இல்லை என்றாலும், கருவில் உள்ள குழந்தைகளை பாதிக்கும் என்பதால் கருவுற்ற பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 2016-ம் ஆண்டு குஜராத்தில் முதலாவது ஜிக்கா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன்பிறகு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், தில்லி உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டது.