தமிழ்நாட்டை உலுக்கிய வேங்கைவயல் சம்பவம்..!! 31 பேரின் DNA-வில் திடீர் ட்விஸ்ட்..!!
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் ஆதிதிராவிடர் காலனியில், 25-க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சமீப காலமாக அங்குள்ள சிறுவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஒவ்வொருவராக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் பயன்படுத்தும் குடிநீரில் ஏதோ கலந்திருப்பதாக, சிறுவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி பார்த்தனர். அப்போது அதில் மலம் கலந்திருப்பது தெரியவந்தது. பின்னர், இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இச்சம்பவம் நிகழ்ந்து ஓராண்டை கடந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. நீதிமன்ற உத்தரவின்படி இதுவரை 5 சிறார்கள் உட்பட 31 நபர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனைக்கான ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னையில் உள்ள அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. ஆனால், அந்த டிஎன்ஏ ஒத்துப்போகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக சிபிசிஐடி எஸ்பி தில்லை நடராஜன் கூறுகையில், ” பரிசோதனை முடிவுகளின்படி 31 நபர்களின் டிஎன்ஏ-வும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து சேகரிக்கப்பட்ட மலத்தின் டிஎன்ஏவோடு ஒத்துப் போகவில்லை. இதற்கு அடுத்தபடியாக 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதிக்க கோரி புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தை அணுகி உள்ளோம். அடுத்தடுத்த சோதனைகளின் அடிப்படையிலேயே குற்றவாளிகளை கண்டறிய முடியும்” என்று கூறினர்.