எல்கர் பரிஷத் வழக்கு: ஷோமா சென்னுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்!
எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்த ஷோமா சென்னுக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது.
மகாராஷ்ட்ராவின் புனே அருகே உள்ள சிறிய கிராமமான பீமா கோரேகானில் கடந்த 2018, ஜனவரி ஒன்றாம் தேதி தலித்துகளுக்கும் மராத்தா குழுக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார்; பலர் காயமடைந்தனர். இந்த வன்முறை தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் ஆங்கில இலக்கிய பேராசிரியரும், சமூக ஆர்வலருமான ஷோமா சென் சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். தற்போது வயது முதிர்வு மற்றும் மருத்துவ கவனிப்புக்கான தேவை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
நீதிபதி அனிருத்தா போஸ் தலைமையிலான அமர்வு இந்த மனுவை விசாரித்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மகாராஷ்டிராவை விட்டு வெளியேறக் கூடாது, பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஷோமா சென்னுக்கு ஜாமீன் வழங்கியது. ஜாமீன் நிபந்தனைகளை மீறக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய உத்தரவு என்பது இடைக்கால முடிவு என்றும், வழக்கின் தன்மை மற்றும் விசாரணை நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுகளைப் பொறுத்தது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.