சூப்பர்..!! இவர்களுக்கெல்லாம் வீட்டுமனை பட்டா..!! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு..!!
பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள வீட்டு மனைகளுக்கு பட்டாக்கள் வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய அவர், ”சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிரந்தர தீர்வு கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் 2 லட்சம் குடும்பங்களின் நில, வாழ்விட உரிமையை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்றார்.
இதுபற்றி உதயநிதி மேலும் கூறுகையில், "சென்னை மாநகரம் புதிய குடியிருப்புகள் மற்றும் கட்டுமானங்கள் விரிவடைந்து வளர்ந்து கொண்டிருக்கிறது. திமுக அரசு அமைந்த பிறகு, ஏற்கனவே வீடு கட்டி குடியிருக்கும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் 'இ-பட்டா'க்களை நாம் வழங்கியுள்ளோம். இவை தவிர, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளிம்பு நிலை மக்களின் குடும்பங்களுக்கு, காலி மனைப்பட்டா வழங்கி இருக்கிறது நம்முடைய திராவிட மாடல் அரசு.
மேலும், ஆலந்தூர், மதுரவாயல், சோழிங்கநல்லூர், மாதவரம் என புறநகரங்கள் சென்னையுடன் இணைக்கப்பட்ட இந்த பகுதிகளுக்கு 'டவுன் செட்டில்மென்ட்' எனப்படும் நகர நில அளவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் இதுவரை 3 லட்சத்து 20 ஆயிரம் பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை ஒரு லட்சத்து 80 ஆயிரம் தான் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பட்டாக்கள் விரைவில் கொடுக்கப்பட வேண்டும். இதுபோன்ற பட்டா பிரச்சனையால், சென்னை மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் சுமார் 2 லட்சம் குடும்பங்கள் நிரந்தர தீர்வு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த 2 லட்சம் குடும்பங்களுக்கும் நில உரிமையும், வாழ்விட உரிமையும் உறுதி செய்யும் வகையில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை தொடர்ந்து செயல்படும்" என்று தெரிவித்தார்.