பள்ளி மாணவர்களை தண்டிக்க கூடாது...! உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு...!
தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளின் படி, பள்ளிகளில் மாணவர்களை தண்டிக்க கூடாது என்ற வதிமுறைகளை அமல்படுத்த வேண்டும் என்றும், அதை முறையாக செயல்படுத்துவதை கண்காணிக்க பள்ளி அளவிலான குழுக்களை அமைக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தேசிய குழந்தைகள் ஆணையத்தின் விதிமுறைகளை பள்ளிகளில் உடனடியாக அமல்படுத்தக் கோரிய மனு நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது என்சிபிசிஆர் வழங்கிய விதிமுறையை அமல்படுத்துமாறு பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வழிகாட்டுதல்களை கவனமாகப் பின்பற்றும் வகையில், மாவட்ட அளவில் உள்ள அனைத்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கும் வழிகாட்டுதல்களைத் தெரிவிக்குமாறு அரசுக்கு அவர் உத்தரவிட்டார்.
வழிகாட்டுதல்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். உடல் ரீதியான தண்டனையை நீக்குவது மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு மறைமுகமாக துன்புறுத்துவது அல்லது அவர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கும் சூழ்நிலைகள் குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.