For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’சவுக்கு சங்கர் நிலைமை தான் என் கணவருக்கும்’..!! ’2 நாட்களாக எந்த தகவலும் இல்லை’..!! பெலிக்ஸ் மனைவி பரபரப்பு பேட்டி..!!

08:18 AM May 13, 2024 IST | Chella
’சவுக்கு சங்கர் நிலைமை தான் என் கணவருக்கும்’     ’2 நாட்களாக எந்த தகவலும் இல்லை’     பெலிக்ஸ் மனைவி பரபரப்பு பேட்டி
Advertisement

பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர், காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், சவுக்கு சங்கர் தேனி சென்றிருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, தேனி சென்ற போலீசார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். அடுத்தடுத்து அவர் மீது வழக்குகள் பாய்ந்த நிலையில், அவர் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டுள்ளது.

Advertisement

சவுக்கு சங்கர் மீது தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அவர் மீது கஞ்சா வழக்கு, பெண் காவலர்கள் அளித்த புகாரின் பேரில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கிடையே, சவுக்கு சங்கரின் வீட்டில் காவல்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கஞ்சா, பணம், லேப்டாப் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்ந்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியிருந்தனர். இந்நிலையில், சவுக்கு சங்கர் கைதை தொடர்ந்து ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலின் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டை டெல்லியில் வைத்து தமிழக போலீசார் கைது செய்தனர். காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், தான் கைது செய்யப்படலாம் என்பதால், முன் ஜாமீன் கேட்டு ஏற்கனவே ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு விசாரணைக்கு வந்த போது நீதிபதி குமரேஷ் பாபு கடும் கண்டனங்களை தெரிவித்தார்.

யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்துவதற்கான தகுந்த நேரம் இது. நேர்காணல் தர வருபவர்கள் அவதூறான கருத்துக்களை கூற தூண்டும் விதமாக நேர்காணல் எடுப்பவர்களை முதல் எதிரியாக சேர்க்க வேண்டும் என நீதிபதி கூறியிருந்தார். மேலும், ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மனு மீது ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக பேசியுள்ள அவர் மனைவி, "கடந்த 10ஆம் தேதி இரவு 11:20 அவருக்கு அலைபேசி மூலம் பலமுறை அழைத்தபோது அவர் எடுக்கவில்லை. ஒரே ஒரு முறை மட்டும் எடுத்து, தான் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதையடுத்து, அருகில் இருந்த போலீஸ் அதிகாரியிடம் போனை கொடுத்தார். அவரிடம் எதற்காக எனது கணவரை கைது செய்திருக்கிறீர்கள் எப்போது ஊருக்கு கொண்டு வருவீர்கள்? என்று கேட்டபோது இரவு ரயிலில் வர முடியாது, அதனால் மறுநாள் காலையில் ரயிலில் அவரை திருச்சிக்கு கொண்டு வருவதாக தெரிவித்தார்.

மறுநாள் காலையில் தொடர்பு கொண்டபோது காலையில் ரயிலில் டிக்கெட் கிடைக்கவில்லை என்று கூறினார்கள். பின்னர் பலமுறை அழைத்தும் அவர்கள் யாரும் அலைபேசியை எடுக்கவில்லை. எனது கணவரை எங்கே வைத்திருக்கிறார்கள்?, எங்கே கொண்டு செல்கிறார்கள்?. என்னச் செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. சவுக்கு சங்கரைப் போல எனது கணவரின் உயிருக்கும் போலீஸாரால் ஆபத்து ஏற்பட்டுள்ளது" என கூறியிருந்தார்.

இந்நிலையில், திருச்சி எஸ்.பி.அலுவலகத்தில் காத்திருந்த ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மனைவி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ”நான் எஸ்பி அலுவலகத்தில் புகாரளிப்பதற்காக வந்துள்ளேன். ஆனால், இங்கு யாரும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். இதனால், நாளைய தினம் (இன்று) மீண்டும் புகாரளிக்க வருவேன். இதுவரை 48 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. ஆனால், இதுவரை என் கணவர் பெலிக்ஸ் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. சவுக்கு சங்கரை போல் எனது கணவருக்கும் ஏதேனும் பிரச்சனை வருமா என்று பயமாக இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக என் கணவர் குறித்து எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது தெரியவில்லை. ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று உருக்கமாக பேசியுள்ளார்.

Read More : WIPRO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..? மிஸ் பண்ணிடாதீங்க..!!

Advertisement