பெற்றோர்களே உஷார்..!! தவறுதலாக தூக்க மாத்திரை சாப்பிட்ட குழந்தை..!! பரிதாப மரணம்..!! தாய் தற்கொலை முயற்சி..!! நடந்தது என்ன..?
சேலையூர் பகுதியில் தாயின் தூக்க மாத்திரையைத் தவறுதலாகச் சாப்பிட்ட குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேலையூரில் பகுதியில் வசித்து வருபவர்கள் மிதுன்- அஸ்வினி தம்பதி. கணவர் மிதுன் குஜராத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், மனைவி அஸ்வினி சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதி தங்கள் 4 வயது மகளுடன் சந்தோஷபுரம் கலைஞர் கருணாநிதி தெருவில் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு ஏற்கனவே, 7 வயதில் மகன் இருந்தார். ஆனால், கடந்த ஜனவரி மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார்.
இதன் காரணமாக அஸ்வினி கடும் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இதனால், மருத்துவரின் பரிந்துரை பேரில் தூக்க மாத்திரைகளை பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், ஆக.4ஆம் தேதி இரவு அஸ்வினி வழக்கம் போலத் தூக்க மாத்திரையைச் சாப்பிட்டுவிட்டு மீதிமிருந்த மாத்திரைகளை டேபிள் மீது வைத்துள்ளார். பின்னர், அவர் பாத்ரூம் சென்று வருவதற்குள் அஸ்வினியின் 4 வயது மகள், அந்த தூக்க மாத்திரையைச் சாப்பிட்டதாகத் தெரிகிறது. இதை அஸ்வினியும் சரியாக கவனிக்கவில்லை. இருப்பினும், மகளிடம் எதாவது சாப்பிட்டாயா எனக் கேட்க, அதற்கு அக்குழந்தை எதுவும் சாப்பிடவில்லை என தெரிவித்துள்ளது.
இதையடுத்து இருவரும் வழக்கம் போலத் தூங்கச் சென்றுள்ளனர். அப்போது அதிகாலை 4 மணியளவில் அஸ்வினி தூக்கத்தில் இருந்து எழுந்துள்ளார். அப்போது அருகே படுத்திருந்த மகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மகள் வாயில் நுரைதள்ளிய நிலையில், இருந்துள்ளார். அவரை எழுப்ப முயன்றபோதுதான் தனது குழந்தை உயிரிழந்துவிட்டதை அறிந்து கொண்டார். இதனால் அதிர்ந்து போன அஸ்வினி, தனது கணவருக்கும் குடும்பத்தினருக்கும் கடிதம் எழுதி வைத்துவிட்டு கழிப்பறைக்குச் சென்று தற்கொலைக்கு முயன்று ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்தார்.
காலை நீண்ட நேரம் ஆகியும் மகளும், பேத்தியும் வெளியே வராததால் பதற்றமடைந்த அஸ்வினியின் தாயார் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது படுக்கையில் பேத்தி உயிரிழந்த நிலையிலும், கழிப்பறையில் அஸ்வினி ரத்த வெள்ளத்திலும் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். பின்னர், இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டது. அஸ்வினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More : ’தமிழ்ப்புதல்வன்’ திட்டம்..!! உங்களுக்கும் ரூ.1,000 கிடைக்க இதையெல்லாம் பத்திரமா வெச்சிக்கோங்க..!!