நான்காவது நாளாக வெள்ளத்தில் மிதக்கும் பாகிஸ்தான்! - 63 பேர் பலி, பலர் மாயம்!
கடந்த 4 நாட்களாக பாகிஸ்தானில் பெய்து வரும் தொடர் கனமழையால், இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக கொட்டித் தீர்க்கும் கனமழையால் பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இடி மின்னலுடன் கனமழை கொட்டி வருவதால் பல இடங்களிலும் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. கொட்டித் தீர்க்கும் கனமழையால் இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான இறப்புகள் பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பதிவாகியுள்ளன. கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 15 குழந்தைகள் மற்றும் 5 பெண்கள் உட்பட 32 பேர் பலியாகியுள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் குர்ஷித் அன்வர் தெரிவித்தார். வடமேற்கில் மேலும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர், அங்கு 1,370 வீடுகள் சேதமடைந்துள்ளன என்றும் அன்வர் கூறினார்.
பருவநிலை மாற்றம் காரணமாக பாகிஸ்தானில் ஏப்ரல் மாதத்தில் அதிக மழை பெய்யும் என பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையத்தின் மூத்த அதிகாரி ஜாகீர் அகமது பாபர் தெரிவித்தார். "இதுவரை பலுசிஸ்தானில் இயல்பை விட 256% மழை பெய்துள்ளது. ஒட்டுமொத்தமாக, பாகிஸ்தான் முழுவதும் இந்த மாதம் இயல்பை விட 61% மழை பெய்துள்ளது” என பாபர் அசோசியேட்டட் கூறினார்.
மழை பாதிப்பு குறித்து அந்நாட்டு பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கூறியதாவது, ”2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, மழையால் ஆறுகள் பெருக்கெடுத்து, ஒரு கட்டத்தில் பாகிஸ்தானின் மூன்றில் ஒரு பகுதியை வெள்ளத்தில் மூழ்கடித்து. அந்த வெள்ளத்தில் 1,739 பேர் உயிரிழந்தனர். 30 பில்லியன் டாலர் சேதத்தை ஏற்படுத்தியது. இப்போது மீண்டும் அதே நிலை நிழவுவதாக கருதுகிறேன்” என்றார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அண்டை நாடான ஆப்கானிஸ்தானிலும் இதே நிலை தான் நிழவுகிறது. அங்கு கனமழையினால் இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். 600க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. சுமார் 200 கால்நடைகள் பலியாகின. சாலைகள் மற்றும் விவசாய நிலங்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளது என இயற்கை பேரிடர் மேலாண்மைக்கான மாநில அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா ஜனன் சாய்க் கூறினார். ஆப்கானிஸ்தானில் உள்ள அதிகாரிகள் ஏறக்குறைய 23,000 குடும்பங்களுக்கு உதவி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.