நோட்டா உடன் போட்டி போடும் கட்சி பாஜக...! கடுமையாக விமர்சனம் செய்த முதல்வர் ஸ்டாலின்...!
பாஜக உடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேனியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசியவர்; பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைதியாக இருக்கும் இந்தியா, அமளியாக மாறிவிடும். மாநிலத்திற்கும், நாட்டுக்கும் நம்பிக்கை தரும் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. சாதியாலும், மதத்தாலும் மக்களை பிளவுபடுத்தும் மோடி, திமுகவை குற்றம் சாட்டலாமா?. இப்போது கூட சமூக நீதி நிறைந்த காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை, முஸ்லிம் லீக்கின் தேர்தல் அறிக்கை என பேசியுள்ளார்.
சென்னை தியாகராயர் நகரில் மோடி நேற்று ரோடு ஷோ நடத்தியுள்ளார். அந்த இடத்திற்கு தியாகராயர் நகர் என பெயர் வந்த வரலாறு அவருக்கு தெரியுமா..? தியாகராயர், பனகல் அரசர், சொளந்தரபாண்டியர் ஆகியோர் பெயர்களில் திராவிட கோட்டமாக இருக்கும் இடத்தில் உங்களது ஷோ எடுபடுமா..? ப்ளாப் ஷோ ஆகவே முடிந்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவாக்கம் செய்வதாக மோடி கூறியுள்ளார். ஆனால், அந்த திட்டத்திற்கு தடையாக இருப்பவரே அவர்தான். உரிய நிதி வழங்காததால் திட்டப் பணிகள் தாமதமாகிறது2020ம் ஆண்டு மெட்ரோ விரிவாக்கப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டும் இன்று வரை ஒன்றிய அரசின் பங்கீடு அளிக்கப்படவில்லை. மாநில அரசின் நிதியிலேயே மெட்ரோ பணிகள் நடக்கின்றன. இதனால் ஆண்டுக்கு ரூ.12,000 கோடி கூடுதல் செலவாகிறது. இதனை மறைத்து மோடி பச்சைப் பொய் பேசுகிறார்.
10 ஆண்டுகளாக பிரதமராக இருந்தும் வெளியே சொல்லக் கூட சாதனைகள் இல்லாத பிரதமர், மதத்தை கையில் எடுத்துள்ளார். பாஜக உடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம், நோட்டா உடன் போட்டி போடும் கட்சி பாஜக எனக் கூறிய டிடிவி தினகரன், தற்போது பாஜக கூட்டணியில் தேனியில் போட்டியிடுகிறார். இப்போது நோட்டா உடன் போட்டி போட வந்தீர்களா? என வாக்காளர்களான நீங்கள் கேட்க வேண்டும். வழக்குகளில் இருந்து தப்பிக்க டிடிவி தினகரன் பாஜகவை நாடியுள்ளார். ராமநாதபுரத்தில் ஓ.பி.எஸ், தேனியில் தினகரன் இருவரையும் மிரட்டி தேர்தலில் நிறுத்தியிருக்கிறது பாஜக என கூறினார்.