Multiplex Theaters | தமிழ்நாட்டில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை மூடிவிடுவோம்..!! எச்சரிக்கும் உரிமையாளர்கள் சங்கம்..!!
Multiplex Theaters | இதுகுறித்து தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து திருப்பூர் சுப்பிரமணியம் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், “தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் சினிமா மட்டுமே ஒளிபரப்பப்பட வேண்டிய நிலை இருக்கிறது. ஆனால், மற்ற மாநிலங்களில் உள்ள தியேட்டர்களில் இசை நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை கூட நடத்திக் கொள்ள அனுமதி உள்ளது.
நடந்து முடிந்த கால் பந்து போட்டியை நிறைய மாநிலங்களில் உள்ள பிவிஆரில் தியேட்டர்களில் ஒளிபரப்பு செய்தனர். இதனால் அவர்களுக்கு படம் ஓடாவிட்டாலும் ஏதாவது ஒரு வகையில் லாபம் கிடைக்கிறது. ஆகையால், மற்ற மாநிலங்களை போல் தியேட்டர்களில் இந்த நிகழ்ச்சிகளை நடத்தி கொள்ள அனுமதி கோரி தமிழ்நாடு அரசிடம் மனு கொடுக்கவுள்ளோம். திரையரங்கு உரிமையாளர் சங்கத் தேர்தலை வரும் ஜூன் மாதம் நடத்த முடிவு செய்துள்ளோம். மற்ற மாநிலங்களில் தியேட்டர்களில் ஒரு படம் ரிலீஸான 8 மாதங்கள் கழித்துதான் ஓடிடியில் ரிலீஸாகிறது. ஆனால், இங்கு அப்படி இல்லை.
தியேட்டரில் தின்பண்டங்கள் விலை அதிகரிப்பு குறித்தும் பார்க்கிங் கட்டண விலை குறித்தும் கேட்கிறீர்கள். வியாபாரத்தில் உணவு பொருளை பொருத்தமட்டில் நிர்ணயிக்கப்பட்ட விலை என்பது ஒன்றும் கிடையாது. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு தரத்தில் உணவை விற்கின்றனர். ஒரு ஸ்டார் ஹோட்டலில் ஒரு உணவின் விலை ஒன்றிருக்கும். அதே உணவு சாதா ஹோட்டலில் குறைவாக இருக்கும். அப்போது ஸ்டார் ஹோட்டலில் போய் சாதா ஹோட்டல் உணவு விலையிலேயே விற்பனை செய்யுங்கள் என கேட்க முடியுமா..? சிறிய படங்களுக்கு கட்டணக் குறைப்பு செய்ய போகிறோம். இது குறித்து பேசி முடிவு செய்த பிறகு அறிவிக்கிறோம்.
சிறிய படங்களை பார்க்க மக்களே விரும்பவில்லை. இதனால் அதன் கட்டணத்தை குறைக்க முடிவு செய்துள்ளோம். உள்ளூர் பொழுதுபோக்கு வரியை நீக்க வேண்டும். ஏப்ரல் 1ஆம் தேதி முதல் திரையரங்குகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பேட்டா தரப்படமாட்டாது என தீர்மானம் போட்டுள்ளோம். திரையரங்கு பராமரிப்பு கட்டணத்தை உயர்த்தவும் கோரிக்கை வைத்துள்ளோம். 70, 80 சதவீதம் வரி வசூலிக்கப்படுவதால் எங்களுக்கு லாபமே இல்லை. இதனால் தியேட்டர்களை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்” என்று தெரிவித்தனர்.