அது வாரிசு அரசியல் அல்ல..!! இதுதான் வாரிசு அரசியல்..!! விளக்கம் கொடுத்த எடப்பாடி பழனிசாமி..!!
எம்பி, எம்எல்ஏ தேர்தலில் போட்டியிடுவது வாரிசு அரசியல் அல்ல எனவும், கட்சிக்கு தலைமை ஏற்பது தான் வாரிசு அரசியல் எனவும் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”காலையிலேயே வியாபாரிகள் மற்றும் மக்களை சந்தித்து கலந்துரையாடி இருக்கிறோம். வறட்சி காரணமாக விலைவாசி உயர்ந்திருப்பதாக கூறி இருக்கிறார்கள். 10 காலம் அதிமுக ஆட்சியில் இருந்தபோது அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை எவ்வித தடையுமின்றி வழங்கியிருக்கிறோம். ஆனால், கடந்த ஓராண்டில் அகவிலைப்படியை பிடித்தம் செய்த பிறகு தான் ஊழியர்களுக்கு வழங்கி இருக்கிறார்கள்.” என்றார்.
மேலும், “அரசு ஊழியர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை. பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால், அதை நிறைவேற்றவில்லை. 3 வருடமாக நடைமுறைப்படுத்தாதவர்கள் தேர்தலுக்காக இப்போது ஆசைவார்த்தைகளை கூறி வருகிறார்கள். தேர்தல் முடிந்தவுடன் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள். திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்ததில் பயனில்லை என்றால், எதற்காக பாமகவும், அன்புமணியும் மாறி மாறி திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தார்கள்? ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு நிலைப்பாடு எடுப்பது தான் பாமகவின் அரசியல் . நிலையான கொள்கை இல்லாத கட்சி பாமக.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “எதிர்க்கட்சிகள், எதிரணியில் இருப்பவர்கள் கூட எங்களின் மூத்த தலைவர்களை பாராட்டுகின்றனர். ஆனால், அதற்கும் வாக்குகளுக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. எம்எல்ஏ., எம்பி, பதவிகளுக்காகப் போட்டியிடுவது வாரிசு அரசியல் ஆகாது. கட்சியின் தலைவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பது தான் வாரிசு அரசியலாகும். இன்று கட்சியில் ஒருவர் பதவி வகித்தால் நாளை வேறொருவர் அந்தப் பதவிக்கு வருவார். அது குடும்ப அரசியல் அல்ல. எனக்கு பின்னால் ஒரு சாதாரண தொண்டன் தான் தலைமை பொறுப்புக்கு வருவார்” என்றார்.
Read More : Lok Sabha | விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு..!! முக்கிய அம்சங்கள் என்னென்ன..?