For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வீட்டில் பயன்படுத்தும் ஃபிரிட்ஜில் இவ்வளவு ஆபத்து இருக்கா..? மக்களே இப்போவாச்சும் தெரிஞ்சிக்கோங்க..!

Now let's see what foods can and shouldn't be kept in the fridge.
01:01 PM Jun 08, 2024 IST | Mari Thangam
வீட்டில் பயன்படுத்தும் ஃபிரிட்ஜில் இவ்வளவு ஆபத்து இருக்கா    மக்களே இப்போவாச்சும் தெரிஞ்சிக்கோங்க
Advertisement

அன்றாட வாழ்க்கையில் நம்மோடு இரண்டறக் கலந்துவிட்ட ஒரு வீட்டு உபயோக சாதனம்தான் ஃப்ரிட்ஜ். தற்போது டிவி இல்லாத வீட்டை ஆச்சர்யமாகப் பார்ப்பதுபோல, ஃப்ரிட்ஜ் இல்லாத வீடும் பார்க்கப்படுகிறது. ஃப்ரிட்ஜில் இட்லி மாவில் தொடங்கி உணவுப் பொருள்களைச் சேமித்து வைப்பது அத்தனை எளிதான வேலையாகிவிட்டது. ஆனால் மீதமான உணவை, குளிர்ந்த நிலையில் வைத்திருந்து அடுத்த வேளைக்குச் சூடுபடுத்திச் சாப்பிடுவது சில நேரங்களில் ஆபத்தில் முடியும். எனவே, எந்த உணவையெல்லாம் ஃப்ரிட்ஜில் வைக்கலாம், எதை வைக்கக் கூடாது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

Advertisement

பால்: பாலை வாங்கி சில மணி நேரங்களில் உபயோகித்து விடுவது நல்லது. அதிகபட்சம் ஒரு நாள் வரை பாதுகாத்து வைக்கலாம். அதற்கு மேலும் வைத்திருந்து பயன்படுத்த நினைப்பவர்கள், ஃப்ரிட்ஜில் வைக்கலாம். ஆனாலும், ஓரிரு தினங்களுக்குள் அதை பயன்படுத்துவது நல்லது.

வெண்ணெய்: அதிகக் கொழுப்புச்சத்து, குறைவான நீர்ச்சத்துக் கொண்டது வெண்ணெய். வெளிச்சம் அதிகம்படும் இடத்திலோ, காற்றோட்டமான இடத்திலோ வெண்ணெயை வைத்திருந்தால் ஓரிரு நாட்களில் அது கெட்டுப்போய்விடும். எனவே, அதிக நாள் வைத்திருந்து வெண்ணெயைப் பயன்படுத்த விரும்புகிறவர்கள் ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.

இறைச்சி: அதிகக் குளிரான சூழலில், மிக அதிகமான நேரம் எந்த உணவை ஃப்ரிட்ஜில் வைத்திருந்தாலும், உணவு அதன் தன்மையை இழந்துவிடும். குறிப்பாக, இறைச்சி வகைகள். சமைக்கப்படாத இறைச்சிகளை, ஓரிரு நாள்கள் ஃப்ரிட்ஜில் வைத்திருக்கலாம். சமைத்த இறைச்சியை 3 நாள்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்திருக்கலாம். அதற்கு மேல் வைத்திருந்தால் உணவின் இயல்பான தன்மை போய்விடும். வெளியே எடுக்கும்போது, இறைச்சியின் மேற்பரப்பு கடினமாக மாறியிருக்கும். அதைச் சூடுபடுத்திய பின்னரே, உபயோகப்படுத்த வேண்டும். இறைச்சியில் பாக்டீரியா வளர்வது அதிகமாக இருக்கும். எனவே, தனித் தனி அறைகள் கொண்ட ஃப்ரிட்ஜை இறைச்சி வைக்கப் பயன்படுத்துவது நல்லது.

தயிர்: இது, உறைவதற்கு, இரண்டு மணி நேரத்துக்கு மேல் எடுத்துக்கொள்ளும். உறையும் வரை, தயிரை வெளியில் வைத்திருப்பதுதான் நல்லது. அதிக வெப்பநிலையில் தயிரை வெகுநேரத்துக்கு வைத்திருந்தால், அது திரிந்துபோய்விடும். எனவே, உறைந்ததும் ஃப்ரிட்ஜில் வைத்துவிட வேண்டும். எவ்வளவு விரைவாகப் பயன்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு நல்லது.

மருந்து, மாத்திரைகள்: ஒவ்வொரு மாத்திரையிலும் சிரப்பிலும் எந்த வெப்பநிலையில் அதை வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். இன்சுலின் போன்ற மருந்துகளை, குளிர்ச்சியான நிலையில்தான் வைத்திருக்க வேண்டும். அப்படிக் குறிப்பிடப்பட்டிருக்கும் மருந்து, மாத்திரைகளை மட்டும் ஃபிரிட்ஜில் வைத்திருப்பது நல்லது.

உலர் பழங்கள்: உலர் திராட்சை, பேரீச்சம் பழம், அத்திப்பழம், பாதாம் போன்ற உலர் பழங்களின் ஆயுட்காலம் மாதக்கணக்கில் இருக்கும். இவற்றை எந்தச் சூழலில் சேமித்து வைத்தாலும், குறிப்பிட்ட காலம் வரை கெடாமல் அப்படியே இருக்கும். அவற்றை ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்க விரும்புபவர்கள், ஃப்ரிட்ஜில் வைத்துப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

கொத்தமல்லி, கறிவேப்பிலை: இரண்டையும் சுத்தப்படுத்தி, காகிதத்தில் சுற்றி, சிறிது மஞ்சள்வைத்து கட்டிவிட வேண்டும். அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்தால், ஒரு வாரத்துக்கும் மேல் கெடாமல் இருக்கும்.

கீரைகள்: பல வீடுகளில் ஒரு கட்டுக் கீரையை அப்படியே பயன்படுத்துவதற்குப் பதிலாக, பாதிப் பாதியாகப் பயன்படுத்துவார்கள். சில நாட்கள் கழித்து கீரையைச் சமைத்தால், பாக்டீரியா பாதிப்புகள் ஏற்பட்ட வாய்ப்புள்ளது. அதைத் தடுக்க ஃப்ரிட்ஜ் உதவும். மீதமான கீரைகளைச் சுத்தப்படுத்தி, ஒரு காகிதத்தில் சுற்றி, அதில் மஞ்சள் ஒன்றைப் போட்டுவைத்தல் கீரை ஃப்ரெஷ்ஷாக இருக்கும். கீரையையும் இரண்டு நாட்களுக்குள் பயன்படுத்துவது நல்லது.

எலுமிச்சை, ஆரஞ்சு: சிட்ரஸ் பழங்களை குளிர்ந்த, இருண்ட இடத்தில் வைத்திருந்தால், அதன் ஆயுட்காலம் அதிகரிக்கும். எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு போன்ற அனைத்தையுமே அப்படி வைத்திருக்கலாம். எலுமிச்சையை இறுகக் கட்டாமல், லேசானக் காற்றோட்டத்தில் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். அதேபோல, சமைப்பதற்கு ஓரிரு மணி நேரத்துக்கு முன்னர் அதை வெளியில் எடுத்து வைக்க வேண்டும்.

கேரட்: கேரட்டை அறையின் வெப்பநிலையில் வெளியில் வைத்திருந்தால் சில தினங்களில் கெட்டுப்போக வாய்ப்புண்டு. ஆனால், ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால், விரைவில் கெடாமல் பாதுகாக்கலாம். கேரட்டை முதல் ஓரிரு நாட்களுக்குக் காற்றோட்டமாக, வெளியில் வைத்திருக்க வேண்டும். பிறகு ஃபிரிட்ஜில் வைக்கலாம்.

ஸ்ப்ரிங் ஆனியன் (Spring onions): வெங்காய வகைகளிலேயே, இது அதிக ஈரப்பதம் கொண்டது. எனவே, இதை இரண்டு நாட்களுக்கு மேல் வெளியில் வைத்திருக்கக் கூடாது. ஒன்றாகச் சேர்த்துக் கட்டி ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால், சில வாரங்கள் வரை கெடாமல் இருக்கும்.

ஃப்ரிட்ஜ் என்பது, உணவின் வாழ்நாளை நீட்டிக்க உதவும் ஒரு சாதனம். அதற்காக அனைத்து உணவுப் பொருள்களையும் அதில் சேமித்துவைத்துப் பயன்படுத்துவது, அதிக நாட்கள் வைத்திருந்து பயன்படுத்துவது தவறு. எந்த உணவுப் பொருளாக இருந்தாலும், குறிப்பிட்ட நாள்களுக்குப் பிறகு அது தன் இயல்புத் தன்மையை இழந்துவிடும். தேன், பிரெட், ஜாம், நட்ஸ், நறுக்கிய பழங்கள், வெங்காயம், கெட்சப், எண்ணெய் போன்றவற்றை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி வைத்திருந்தால், அவற்றின் ஊட்டச்சத்துகளை இழக்க நேரிடும்.

அண்மைக் காலமாக ஃப்ரிட்ஜில் முட்டையை வைப்பதற்கு, முழு பழங்களை வைப்பதற்கு, காய்கறிகளை வைப்பதற்கு எனத் தனித்தனி அறைகள் இருக்கின்றன. காய்கறிகளைப் பாதுகாக்க தனிப்பைகளும் கிடைக்கின்றன. அவற்றைச் சரியாகப் பயன்படுத்தாத பட்சத்தில், வெப்பநிலை மாற்றத்தால் பொருள்கள் கெட்டுப்போகலாம். இது, தேவையில்லாத உடல் உபாதைகளுக்கும் பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும்.

Read more ; விமானப் பயணத்தின்போது இந்த பொருள்களை எடுத்துச் செல்ல கூடாது..!! முழு விவரம் இதோ..

Tags :
Advertisement