குட் நியூஸ்..!! புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை..!! பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு..!!
தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்துவதற்காக கடந்த 2023 ஜூன் மாதம் முதல், புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. செப்டம்பர் மாதம் முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்கில், மகளிர் உரிமை தொகையாக மாதம் ரூ.1,000 செலுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும், கடந்த 7 மாதங்களில், ஐந்தாயிரம் முதல் எட்டாயிரம் புதிய ரேஷன் கார்டுக்கான விண்ணப்பங்கள், நிலுவையில் உள்ளன.
புதிய கார்டுக்கான விண்ணப்பங்கள் அங்கீகாரம் வழங்கப்படாமலும், அச்சிடும் பணிகளும் தொடர்ந்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும், 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர், ரேஷன் பொருட்களை பெற முடியாமல், ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், விரைவில் புதிய ரேஷன் அட்டை வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, நாடாளுமன்ற தேர்தல் வருவதால், பிப்ரவரி 19ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டும் தமிழக பட்ஜெட்டில் மகளிர் உரிமைத்தொகைக்கு கூடுதல் நிதி ஒதுக்கி, புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.