மிஸ் பண்ணிடாதீங்க...! கால்நடைகளுக்கு இன்று முதல் 21 நாட்களுக்கு இலவச தடுப்பூசி...!
கால்நடைகளில் ஏற்படும் தொற்று நோயான கால் மற்றும் வாய் நோய் எனப்படும் கோமாரி நோய்க்கு இன்று முதல் 21 நாட்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; கால்நடைகளில் ஏற்படும் தொற்று நோயான கால் மற்றும் வாய் நோய் எனப்படும் கோமாரி நோய் மூலம் விவசாயிகளுக்கு கால்நடைகளில் இறப்பும் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. மேலும், பால் உற்பத்தி கடுமையாக குறைதல், மலட்டுத்தன்மை. கருச்சிதைவு. கால்நடைகளில் எடை குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. பெரும்பான்மையான கால்நடை உரிமையாளர்கள் சிறு, குறு விவசாயிகளாக உள்ளதால், கால்நடை இழப்பினால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பை தாங்க இயலாத நிலையில் உள்ளனர்.
எனவே, கால்நடைகளை தொற்று நோய்களிலிருந்து காப்பாற்றும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடுதல் அவசியமாகிறது. மேலும், இந்நோய் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலம், நோய்பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள் சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் இந்நோய் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மைக் கொண்டது. மேலும், இந்நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர்,பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது.
எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 169200 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தேசிய கால்நடை நோய்தடுப்புத் திட்டத்தின் கீழ் ஐந்தாம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணி இன்று முதல் 21 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. எனவே, கால்நடை உரிமையாளர்கள் தங்களது பசுக்கள். எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகள் ஆகியவற்றிற்கு கால் மற்றும் வாய் கோமாரி நோய் தடுப்பூசி தவறாது போட்டுக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தி உள்ளார்.