10 உயிர்களை காவு வாங்கிய பட்டாசு ஆலை வெடிவிபத்து!… அதிகாலையில் ஒருவர் கைது!
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ராமுத்தேவன்பட்டியில் விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான வின்னர் பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 40க்கும் மேற்பட்ட அறைகள் இயங்கி வந்தது. இந்த ஆலையில் நேற்று (பிப்.17) வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், பேன்ஸி ரக பட்டாசுகளுக்கு மருந்து வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில், அந்த அறை முழுவதும் இடிந்து விழுந்தது. அதோடு, தீப்பொறி மற்ற அறைகளுக்கும் வெடித்துச் சிதறியதால் அடுத்தடுத்த இருந்த 4 அறைகளிலும் வெடி விபத்து ஏற்பட்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த விபத்தில், 4 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சிவகாசி, ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்பு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், இந்த வெடி விபத்து தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில், வெடிவிபத்து சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் விக்னேஷ், மேலாளர் ஜெயபால் மற்றும் போர்மேன் சுரேஷ்குமார் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.போர்மேன் சுரேஷ்குமார் மட்டும் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.