For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மகாலட்சுமி உங்கள் வீட்டிற்கு வர இந்த விஷயங்களை எல்லாம் மறக்காமல் பண்ணுங்க..!!

05:20 AM Apr 21, 2024 IST | Chella
மகாலட்சுமி உங்கள் வீட்டிற்கு வர இந்த விஷயங்களை எல்லாம் மறக்காமல் பண்ணுங்க
Advertisement

வெள்ளிக்கிழமையில் நாம் விளக்கேற்றி பூஜை செய்யும் நேரத்தில் தான் மகாலட்சுமி நம்முடைய வீட்டிற்கு வருவதாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், தெய்வங்கள் நம்முடைய வீட்டிற்குள் எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக இரவு மற்றும் அதிகாலையில் தெய்வங்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்த சமயத்தில் நம்முடைய வீட்டில் நாம் கடைபிடிக்கும் விஷயங்கள் தான் தெய்வ சக்தியை விரும்பி நம்முடைய வீட்டில் இருக்கச் செய்யும். வெள்ளிக்கிழமை என்பது செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமிக்கு உரிய நாளாகும். அன்றைய தினம் மகாலட்சுமி நம் வீடு தேடி வர வேண்டும் என்றால், முந்தைய நாளான வியாழக்கிழமையே நம் வீட்டில் சில விஷயங்களை செய்து வைக்க வேண்டும்.

Advertisement

​மகாலட்சுமி வரவேற்க செய்ய வேண்டியவை :

* வீடு முழுவதையும் வியாழக்கிழமை அன்றே சுத்தம் செய்து, பூஜை அறையை சுத்தம் செய்து, வெள்ளிக்கிழமை பூஜைக்கு தயாராகுங்கள்.

* வெள்ளிக்கிழமை மகாலட்சுமி மனநிறைவோடு நம் வீட்டிற்கு வருகை தர, வியாழக்கிழமை இரவு மட்டும் அல்ல, தினந்தோறும் இரவு நேரத்தில் சமையலறையில் எச்சில் பாத்திரங்கள் கட்டாயம் இருக்கக் கூடாது. முடிந்தவரை எச்சில் பாத்திரத்தை சுத்தம் செய்துவிட்டு தூங்கச் செல்லுங்கள்.

மகாலட்சுமி விரும்பும் இடங்கள் :

* மகாலட்சுமி விரும்பி வாசம் செய்வதாக சொல்லப்படும் கல் உப்பு, அரிசி, பருப்பு, புளி போன்ற பொருட்கள் வைத்திருக்கும் பாத்திரம் எப்போதும் காலியாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் அவற்றை கழுவி சுத்தம் செய்வதாக இருந்தால் வியாழக்கிழமையே செய்து, மறுநாள் வரை காத்திருக்காமல் உடனடியாக அவற்றை நிரப்பி வைத்து விடுங்கள்.

* சமையல் அறையில் சமையலுக்காக பயன்படுத்தும் அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் ஆங்காங்கே சிந்தி, சிதறி கிடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சமையலறையில் செய்ய வேண்டியது :

* வியாழக்கிழமை அன்று சமையலறை, சமையல் மேடை மற்றும் அடுப்பை சுத்தம் செய்து மஞ்சள், குங்கும பொட்டை வைத்திருக்க வேண்டும்.

* அடுப்பு, உப்பு ஜாடி, அஞ்சறைப் பெட்டி, அரிசி கொட்டி வைத்திருக்கும் பாத்திரம், அரிவாள்மனை அல்லது கத்தி. இந்த பொருட்களில் எல்லாம் கட்டாயம் மஞ்சள், குங்கும பொட்டு வைப்பது நல்லது.

வியாழக்கிழமையில் பெண்கள் செய்யக் கூடாதவை :

* சமையலறை மேடையில் கொஞ்சமாக பச்சரிசி மாவில் மஞ்சள் பொடியை கலந்து மஞ்சள் நிறத்தில் சிறிய கோலம் போட வேண்டும். வியாழக்கிழமை இரவு இதை செய்துவிடுங்கள். மறுநாள் காலை வெள்ளிக்கிழமை குளித்து முடித்துவிட்டு முதலில் மகாலட்சுமியை வேண்டிகொண்டு பாலைக் காய்ச்சுங்கள். அந்த பால் பொங்கி வழிவது போல உங்கள் இல்லமும் சந்தோஷத்தில் பொங்கி வழியும்.

* முடிந்த வரை வியாழக்கிழமை அன்று சுமங்கலி பெண்கள் தலைக்கு குளிப்பதை தவிர்க்கலாம். வியாழன், குரு பகவானுக்குரிய நாளாகும். மங்களங்களை அருளக் கூடிய குரு பகவான், கணவர் உறவிற்கு உரிய கிரகமும் ஆவார். இதனால் வியாக்கிழமையில் பெண்கள் தலைக்கு குளிப்பதால் கணவன் - மனைவி பாதிக்கப்படுவார்கள்.

லட்சுமி தேவிக்கு விருப்பமானவை :

* விளக்கு போன்ற பூஜை பொருட்களை வியாழக்கிழமையே சுத்தம் செய்து, வாசனையான சந்தனம், குங்குமம் வைத்து தயாராக வைத்து விடுங்கள்.

* விளக்கை சுத்தம் செய்த பிறகு காலியாக வைக்கக் கூடாது. அதில் எண்ணெய் அல்லது நெய் விட்டு, திரி போட்டு நிறை விளக்காக மட்டுமே வைக்க வேண்டும்.

* முடிந்த வரை வீட்டில் பூஜை அறையில் சந்தனம், பச்சை கற்பூரத்தின் வாசமும், சமையலறையில் ஏலக்காய், மஞ்சள், குங்குமம் ஆகியவற்றின் வாசமும் இருந்து கொண்டே இருக்கும் படி செய்யுங்கள். மகாலட்சுமிக்கு விருப்பமான விஷயங்களில் இதுவும் ஒன்றாக சொல்லப்படுகிறது.

* வெள்ளிக்கிழமை பூஜைக்கு வியாழக்கிழமையே துளசி, மாவிலை ஆகியவற்றை பறித்து வந்து வைத்து விடுங்கள்.

Read More : ’மீண்டும் தேர்தல் பத்திரம் திட்டம் அமலுக்கு வரும்’..!! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி..!!

Advertisement