பிப்.4ல் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான போட்டித் தேர்வு!… ஆசிரியர் தேர்வு வாரியம்!
தமிழகத்தில் வரும் 4ம் தேதி (ஞாயிறு) பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது
தமிழகத்தில் அரசு நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல வட்டார வள மைய ஆசிரியர்களும் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் இத்தேர்வை நடத்த அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். 2,222 ஆசிரியர்கள் இதன்மூலம் தேர்வு செய்யப்பட்டு காலி இடங்களில் நிரப்பப்படுகிறார்கள். ஏற்கனவே ஜனவரி 7ம் தேதி இந்த தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கான ஹால் டிக்கெட் இணையதளம் மூலம் டிசம்பர் மாதத்தில் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்தனர்.
ஆனால் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு பிப்ரவரி 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டதால் தேர்வர்கள் மேலும் படிப்பதற்கு அவகாசம் கிடைத்தது. தமிழகம் முழுவதும் இத்தேர்வை எழுத 41,485 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் பலர் சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கு கடந்த சில மாதங்களாக சென்று ஆயத்தமாகி வருகின்றனர். வரும் 4ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை தேர்வு நடைபெறும். தமிழகம் முழுவதும் 130 மையங்களில் 41,485 பேர் இந்த தேர்வை எழுத உள்ளனர்.