சிலி காட்டுத்தீ!… பலி எண்ணிக்கை 100ஆக உயர்வு!… அவரச நிலை பிரகடனம்!
சிலி நாட்டில் பயங்கர காட்டு தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 100ஆக உயர்ந்துள்ளதால், அங்கு அவசர நிலை பிரகடனபடுத்தப்பட்டுள்ளது.
தென்அமெரிக்க நாடான சிலியில் மோசமான வானிலை காரணமாக பயங்கர காட்டு தீ ஏற்பட்டுள்ளது. வினா டெல்மார், நவிடாப், எஸ்ட்ரெல்லா, வால்பரைசோ உள்ளிட்ட பகுதிகளில் வனப்பகுதிகளில் ஏற்பட்ட காட்டு தீ குடியிருப்புகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. இந்த காட்டு தீயில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகி விட்டன. தீ விபத்தில் சிக்கி இதுவரை 100 பேர் பலியாகி விட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வௌியேறி உள்ளனர். அதிக வெப்பநிலை, பலத்த காற்று, குறைந்த ஈரப்பதம் காரணமாக தீயை அணைக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. மக்களை மீட்க தீயணைப்பு மீட்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்டவை அந்த பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன. மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வினா டெல்மார், நவிடாப், குயில் பூ, வில்லா எலெமனா மற்றும் லிமாச்சே ஆகிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீயில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு செய்த ஜனாதிபதி கேப்ரியல் போரிக், உயிரிழந்தவர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை தேசிய துக்கநாளாக அறிவித்துள்ளார்.