சென்னையில் தொழில் வரி உயர்வு... எப்பொழுது நடைமுறைக்கு வரும்...? மாநகராட்சி விளக்கம்
சென்னையில் தொழில் வரி உயர்வு தற்போது நடைமுறைக்கு வராது என்று சென்னை மாநகராட்சி விளக்கம். தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்தால் மட்டுமே நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் ஜூலை மாததுக்கான மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்தில் சென்னை மாநகராட்சியின் சொந்த வருவாயைப் பெருக்கும் நோக்கில், வருவாய்த்துறை தொழில்வரிக்கான விகிதம் அரையாண்டிற்கு 35% வரை உயர்த்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குறிப்பாக, ஆறு மாத கால நிகர வருமான வகைகளில் மாத வருமானம் ரூ.21,001 முதல் ரூ.30,000 வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி ரூ.135-லிருந்து ரூ.180 ஆகவும், ரூ.30,001 முதல் ரூ.45,000 வரை வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.315-லிருந்து ரூ.430 ஆகவும், ரூ.45,001 முதல் ரூ.60,000 வரை வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.690-லிருந்து ரூ.930 ஆக வரியை உயர்த்திட சென்னை மாநகராட்சியில் தீர்மானம் போடப்பட்டது. அதேசமயம், ரூ.60,001 முதல் ரூ.75,000 மற்றும் ரூ.75,001 அதற்கும் மேல் வருமானம் உள்ளவர்கள் யாருக்குமே தொழில்வரி உயர்த்தப்படவில்லை.
இதற்கு அனைத்து கட்சியினரும் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர். இந்த நிலையில் சென்னையில் தொழில் வரி உயர்வு தற்போது நடைமுறைக்கு வராது என்று சென்னை மாநகராட்சி விளக்கம். தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்தால் மட்டுமே நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியில் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் முதல் முறை பிடிபட்டால் விதிக்கப்படும் அபராதத்தொகை மாடு ஒன்றுக்கு ரூ.5,000-லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதே மாடு இரண்டாம் முறை பிடிக்கப்படும் போது அதற்கான அபராதத்தொகை ரூ.15,000 எனவும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.