பிரிட்டன் மன்னர் சார்லஸ் உடல்நிலையில் சற்று பின்னடைவு..? மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பு..!!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் மன்னர் சார்லஸ், அறுவை சிகிச்சை முடிந்து இரண்டு இரவுகளுக்குப் பின் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் நேற்றும் மருத்துவமனையிலேயே தங்க வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை குறித்து கவலை உருவாகியுள்ளது.
புரோஸ்ட்ரேட் சுரப்பியில் வீக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த புரோஸ்ட்ரேட் சுரப்பி என்பது ஆண் இனப்பெருக்க மண்டலத்துடன் தொடர்புடைய ஒரு சுரப்பியாகும். வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்னர் சார்லஸ், இரண்டு இரவுகளுக்குப் பிறகு வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் நேற்றும் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தெரிகிறது.
மேலும், மன்னர் வீடு திரும்பினாலும், முழு நேரம் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகள் எதிலும், ஒரு மாதத்திற்கு பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது. ஆனாலும், வீட்டிலிருந்த வண்ணம் ஆவணங்கள் தொடர்பிலான பணிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் சந்திப்பு ஆகியவற்றை அவர் தொடர்வார் என்றும் கூறப்படுகிறது. மன்னர் அனுமதிக்கப்பட்டுள்ள அதே மருத்துவமனையில்தான் அவரது மருமகளான இளவரசி கேட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.