Protest: அதிமுக - பாஜக இரண்டு கட்சிகளும் இன்று திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம்...!
போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் அதிமுக போராட்டம் நடத்த உள்ளது.
மாணவர்கள் மற்றும் இளைஞர்களை சீரழிக்கும் போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், போதைப்பொருள் மாபியா விவகாரத்தில் திமுகவின் நிர்வாகிகளே ஈடுபடுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அளவில் கழகத்தின் சார்பில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களை இணைத்து அதிமுக மாபெரும் மனித சங்கிலி போராட்டம் உள்ளது. போதைப் பொருட்களுக்கு எதிரான போராட்டங்களின் குறியீடாக, எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது “X” தளத்தின் முகப்பு பக்கத்தில் "Say No To Drugs & DMK" என்ற வாசகத்தை இணைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
அதே போல இன்று சென்னையின் பல்வேறு இடங்களில் பாஜகவின் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. வள்ளுவர் கோட்டத்தில் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த் தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் உட்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதேபோல், தமிழகம் முழுவதும் பாஜகவினர் திமுக அரசைக் கண்டித்து வெவ்வேறு நாட்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.