ஓடும் ரயிலில் பதுங்கி இருந்த பாம்பு! பயணியை கடித்ததால் பரபரப்பு!
மதுரை - குருவாயூர் பயணிகள் விரைவு ரயிலில் மதுரையைச் சேர்ந்த பயணி ஒருவரை பாம்பு கடித்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மதுரை குருவாயூர் இடையே தினசரி விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது இந்த ரயில் தினமும் காலை 11:20 க்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2.10 மணிக்கு குருவாயூரை சென்றடைகிறது. அதன் பிறகு காலை அங்கிருந்து புறப்படும் குருவாயூர் மதுரை எக்ஸ்பிரஸ், அன்று இரவே மதுரை வந்துவிடும்.
இந்நிலையில், நேற்று ரயில் கேரளாவில் இருந்து மதுரையை நோக்கி வந்துகொண்டிருந்தபோது சீட்டுக்கு அடியில் பதுங்கி இருந்த பாம்பு மதுரையை சேர்ந்த கார்த்திக் என்ற பயணியை கடித்தது. மதுரை - குருவாயூர் ரயிலில் ஆறாவது பெட்டியில் பயணித்த கார்த்தியை பாம்பு கடித்ததை அடுத்து, ரயில் உடனடியாக எட்டுமானூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அங்கு தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம் கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அந்த ரயில் பெட்டியில் இருந்த அனைத்து பயணிகளும் கீழே இறக்கிவிடப்பட்டு, ரயில்வே ஊழியர்கள் மற்றும் போலீசார் உதவியுடன் பெட்டியில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஆனால் பாம்பு கண்டறியப்படாததால், கடித்தது பாம்பா அல்லது எலியா என்ற சந்தேகம் உள்ளதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ரயில் பெட்டியின் அனைத்து கதவுகளையும் மூடி அந்த பெட்டி ரயிலில் இருந்து பிரிக்கப்பட்டுள்ளது. பின்னர் மற்ற பெட்டிகள் அனைத்தும் இணைக்கப்பட்ட பின்னர் ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் எலி தொல்லை அதிகமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இளைஞர் ஒருவரை பாம்பு கடித்துள்ள சம்பவம் ரயில் பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.