"கல்வி, வேலைவாய்ப்பில் 3-ம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவினராக கருத வேண்டும்!!" -தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவினராக கருத வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. உரிய வாய்ப்புதர மறுத்தால், கல்விதகுதி பெற்ற 3-ம் பாலினத்தவர், சமூகத்தில் அசாதாரணமான வாழ்க்கைக்கு தள்ளப்படுவார்கள் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
கடந்த 2017 – 18ம் ஆண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 ஏ தேர்வில் கலந்து கொண்ட மூன்றாம் பாலின விண்ணப்பதாரரான அனுஸ்ரீ என்பவர், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தன்னை அனுமதிக்கவில்லை என வழக்கு
தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், மூன்றாம் பாலினத்தவர்களை சமூக, கல்விரீதியாக பின்தங்கியவர்கள் எனக் கருதி, கல்வி, வேலைவாய்ப்பில் அனைத்து விதமான இடஒதுக்கீட்டு சலுகைகளையும் வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பை சுட்டிக்காட்டினார். ஆனால் மத்திய அரசோ, மாநில அரசோ இதுவரை இதுசம்பந்தமான விதிகளை வகுக்கவில்லை என வாதிட்டார். இதனால் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காத சூழல் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பாக பிரத்யேக விதிகளை வகுக்க வேண்டும் எனவும், எதிர்காலத்தில் மூன்றாம் பாலினத்தவர்களை ஆண்கள், பெண்கள் பிரிவில் சேர்க்க கூடாது எனவும் அறிவுறுத்திய நீதிபதி, மனுதாரரின் சான்றிதழை சரிபார்க்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு போதுமான வாய்ப்பை வழங்கி, தரமான வாழ்க்கையை வாழ வைக்க வேண்டியது அரசின் கடமை என்றார்.
Read more ; குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்!! கேரள அரசு அறிவிப்பு..