For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”விமர்சிப்பதை விட்டுவிட்டு முடிந்தால் டேட்டாவோடு வாருங்கள்”..!! சவால் விடுத்த பிரதீப் ஜான்..!!

Come with full data and valid sources on rain, I am ready to discuss with you anywhere.
08:58 AM Oct 17, 2024 IST | Chella
”விமர்சிப்பதை விட்டுவிட்டு முடிந்தால் டேட்டாவோடு வாருங்கள்”     சவால் விடுத்த பிரதீப் ஜான்
Advertisement

சென்னையில் 40 சென்டிமீட்டர் மழை பெய்தால் நிச்சயம் தண்ணீர் தேங்க தான் செய்யும். சாலைகளுக்கு தான் வடிகால்களே தவிர மழைக்கு அல்ல என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முன்னதாக தெரிவித்திருந்தார். இது சோஷியல் மீடியாவில் பல விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் விமர்சிப்பதை விட்டுவிட்டு முடிந்தால் டேட்டாக்களோடு சவால் விடுங்கள். அதனை ஏற்க தயாராக இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

Advertisement

தமிழகத்தில் கடந்த 14ஆம் தேதி முதல் சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று மழை ஓரளவுக்கு குறைந்திருக்கும் நிலையில் நேற்றும், நேற்று முன்தினமும் நல்ல மழை பெய்தது. இதன் காரணமாக சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், எழும்பூர் ,சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால், தண்ணீர் தேங்கிய நிலையில், அது உடனடியாக அகற்றப்பட்டது.

அதே நேரத்தில் வேளச்சேரி, பல்லாவரம், பள்ளிக்கரணை, புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. வழக்கமாக சென்னையில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தான் இது மாதிரியான பலத்த மழை பெய்யும். ஆனால், தற்போது அக்டோபர் மாதம் பெய்த மழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுவிட்டது.

இதற்கிடையே, சென்னையில் 40 சென்டிமீட்டர் மழை பெய்தால் நிச்சயம் தண்ணீர் தேங்க தான் செய்யும். சாலைகளுக்கு தான் வடிகால்களே தவிர மழைக்கு அல்ல என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் முன்னதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஆளுங்கட்சிக்கு சாதகமாக பிரதீப் ஜான் பேசுவதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தது. தன்னை பிராண்டிங் செய்ய வேண்டாம் என பிரதீப் ஜான் வெளிப்படையாகவே பேசியிருந்தர். இருந்தும் சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் மூலம் விமர்சனங்கள் அதிகமானது.

இதையடுத்து, விமர்சனங்களுக்கு வெளிப்படையாக விளக்கம் அளித்துள்ளதோடு தன்னை விமர்சித்தவர்களுக்கு சவால் விடுத்துள்ளார் பிரதீப் ஜான். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ”இயல்பான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு அதீத கனமழைக்கு வாய்ப்பில்லை. வானிலை மையங்களின் அறிவுறுத்தல்களில் இருந்து முரண்பட நான் விரும்பவில்லை. கடலில் இன்னமும் காற்றழுத்தம் இருக்கிறது. அது எந்த நேரத்திலும் வெப்பச்சலன மழையாக மாறலாம்.

ஆனால் உண்மையாக சொல்ல போனால், அடுத்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் அதீத கனமழைக்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக தெரியவில்லை. அதீத மழை பெய்ததெல்லாம் நேற்றுடன் முடிந்துவிட்டது. இன்னொரு முறை ஒரே நாளில் 200 மில்லிமீட்டருக்கும் மேற்பட்ட மழை பெய்ய வாய்ப்பில்லை.

அதே வேளையில் நாளை மழை இருக்காது என நான் சொல்லவில்லை. ஆனால், இயல்பான மழையாக இருக்கும். மேற்கண்ட 4 மாவட்டங்களில் எங்காவது ஓரிரு இடங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. நேற்று பெய்த மழை இயல்பானது என்றும் இயல்பில்லை என்றும் நினைப்போருக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கடந்த 24 மணி நேரத்தில் 75 இடங்களில் 200 மிமீட்டருக்கு மேல் மழை பதிவாகியுள்ளது. மழை பெய்யும் போது காலை 8.30 மணி நிலவர மழை கணக்கிடுவதால் மழை பதிவின் அளவு இரு நாட்களுக்கானதாக வந்துவிட்டது.

ஆனால், மழையின் நிகழ்வை பார்த்தோமேயானால் அது 24 மணி நேரத்திற்குள்ளாகவே பெய்துள்ளது. இரவு நேரத்தில் எதிர்பார்த்ததை போல் மழை தொடர்ந்தது. எங்கு எப்போது எவ்வளவு மி.மீ. மழை பெய்துள்ளது என நான் கொடுத்த அட்டவணையை உங்களுக்கு தெரிந்த வானிலை ஆய்வாளர்களிடம் கொடுத்துப் பாருங்கள். அவர்களிடம் இந்த மழை தீவிரமா இல்லை இயல்பா என கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்.

இயற்கைதான், இயற்கையை யாராலும் கணிக்க முடியாதுதான். இந்த டயலாக் எல்லாம் சரிதான். அப்போ இயற்கை வரட்டும், அதை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என கூறிக் கொண்டு எந்த எச்சரிக்கையையும் விடுக்காமல் இருக்க வேண்டுமா? இது வானிலை ஆய்வாளர்களுக்கு வெற்றியா? தோல்வியா? என சர்ட்பிகேட் கொடுப்பதற்காக நடத்தப்பட்ட தேர்வு அல்ல. மனிதனாகிய என்னால் எந்த அளவுக்கு கணிக்க முடியுமோ அந்த அளவுக்கு நான் கணித்துள்ளேன்.

இது போன்று வானிலையை கணிக்க கணினிகள் முக்கிய பங்காற்றுகின்றன என்பது உண்மைதான். நிறைய பேர் விண்டி எனும் செயலி மூலம் வானிலை நிலவரத்தை கணித்துவிடலாம் என பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அது போல் கணிக்கலாம் என்றால் தயவு செய்து என்னை விமர்சிப்பவர்கள் எல்லாம், சமூகவலைதளத்தில் ஒரு வானிலை முன்னறிவிப்பு பக்கத்தை தொடங்கி மக்களுக்கு முன்னறிவிப்புகளை கூறி சேவை செய்யுங்களேன்.

நான் யாருக்கும் ஆதரவாக செயல்படுபவன் அல்ல. நான் யாரையும் திருப்திப்படுத்த முயற்சி செய்யும் நபரும் அல்ல. நான் அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டிருந்தால் வானிலை குறித்து புள்ளி விவரங்களுடன் எந்த பதிவையும் போட்டிருக்க மாட்டேன். நான் மீண்டும் சொல்கிறேன். சென்னை போன்ற நகரில் ஒரே நாளில் 20 செமீ மழை பெய்யும். தாழ்வான இடங்களில் சில மணி நேரத்திற்கு தண்ணீர் தேங்கும். நான் கணித்ததில் எந்த தவறும் இல்லை.

நேற்று பெய்தது ஒரே நாளில் 40 செ.மீ. மழை, மிகப் பெரிய மழை. இப்படிப்பட்ட பலத்த மழை நீரை மழைநீர் சேகரிப்பு வடிகால்கள் மூலம் தண்ணீர் வடிய வாய்ப்பில்லை. நான் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டி மழை பெய்ய 2 அல்லது 3 வாரங்களுக்கு முன்பு சொன்னவை. மக்கள் எந்த சூழலையும் எதிர்கொள்ளும் அளவுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என நான் விரும்பினேன். அப்போதுதான் நமக்கென உதவிக்கு யாரும் இல்லை என்றாலும் இது போன்ற இக்கட்டான சூழல்களில் நமக்கு நாமே பாதுகாப்பாக இருந்து கொள்ளலாம்.

எனவே, தேவையில்லாமல் என்னை அந்த கட்சிக்கு சார்பானவன், இந்த ஆட்சிக்கு சார்பானவன் என முத்திரை குத்தி, உங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் என்னை விமர்சித்து மீம்ஸ்களை உருவாக்குவதற்கு பதில், மழை குறித்த முழு டேட்டாக்கள் மற்றும் சரியான ஆதாரங்களுடன் வாருங்கள், உங்களுடன் விவாதிக்க எந்த இடத்திலும் நான் தயாராக இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Read More : சுபாஷே..!! பைக்கில் சென்றவர் மீது காரை விட்டு ஏற்றிய மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர்..!! டிரைவிங் லைசன்ஸ் ரத்து..!!

Tags :
Advertisement