தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு!!
உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு ‛இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 19 ம் தேதி முதல் ஜுன் 1ம் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜுன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த மக்களவைத் தேர்தலுக்கான தேதியை கடந்த மாதம் 16ம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார்.
இந்நிலையில் தான் இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு ‛இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு அமைப்புகள் தயாரித்த அறிக்கையில், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு தீவிரமான பாதுக்காப்பு வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "மத்திய உள்துறை அமைச்சகம் இந்தப் பணிக்காக 40 - 45 பேர் அடங்கிய குழுவை மத்திய ரிசர்வ் போலீஸ் படையிடம் ஒப்படைத்துள்ளது. இந்த ஆயுதமேந்திய குழுவினர் தலைமைத் தேர்தல் ஆணையர் நாடு முழுவதும் பயணம் செய்யும்போது அவருடன் பயணிப்பர்" என்ற தெரிவித்தனர்.
இதில் ஒரு பகுதியினர் ராஜீவ் குமாரின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மற்றபடி 6 வீரர்கள் என்ற அடிப்படையில் மொத்தம் 18 பேர் 3 ஷிப்டுகளில் ராஜீவ் குமாரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.