ஊழியர்களுக்கு Work From Home..!! மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு..!! தண்ணீரின்றி அவதிப்படும் பெங்களூரு..!!
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நகரில் 3,000-க்கும் மேற்பட்ட ஆழ்த்துளை கிணறுகள் நீரின்றி வறண்டு காணப்படுவதால் மக்கள் தண்ணீர் லாரியை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட எல்லைகளுக்குள் போர்வெல் அமைப்பதென்றால், முன் அனுமதி கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது.
கோடைகாலம் தொடங்கும் முன்பே அங்கு தண்ணீர் பிரச்சனை தொடங்கிவிட்டது. இந்தியாவில் 3-வது அதிகமான மக்கள் தொகை கொண்ட பெங்களூருவில் கிட்டத்தட்ட ஒரு கோடியே 40 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். மக்களின் அன்றாட தண்ணீர் தேவையில் 1,500 மில்லியன் லிட்டர் பற்றாக்குறை உள்ளது. மார்ச் முதல் மே மாதம் வரை மட்டும் சுமார் 8 ஆயிரம் மில்லியன் கன அடி தேவை இருப்பதாக கர்நாடக அரசு கூறியுள்ளது. தற்போது 34 டிஎம்சி தண்ணீர் மட்டுமே நீர்த்தேக்கங்களில் உள்ளது.
பல சர்வதேச நிறுவனங்கள் பெங்களூரில் செயல்பட்டு வருகின்றன. பல மாநிலங்களில் இருந்தும் மக்கள் சென்று அங்கு வேலை செய்கின்றனர். இதனால் மக்கள் தொகை அங்கு அதிகரித்துள்ளது. ஆகையால் தண்ணீர் தேவை வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. அதை கருத்தில் கொண்டு, மழைக்காலம் வரை ஊழியர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பி வீடுகளில் இருந்து வேலை செய்ய பல கார்ப்பரேட் நிறுவனங்கள் அறிவுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தண்ணீர் பற்றாக்குறையை சற்றே சமாளிக்கலாம் என்று நிறுவனங்கள் கருதுகின்றன.
அதேபோல தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு தனியார் பள்ளிகள், பயிற்சி மையங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த முடிவு செய்துள்ளன. தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீரை வாகனங்களை சுத்தம் செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்றனர். கால்நடைகளை வளர்ப்பவர்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
இதற்கிடையே, பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம், நீச்சல் குளங்களில் குடிநீரை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், மால்கள் போன்ற பொழுதுபோக்கு இடங்களிலும், மற்ற இடங்களிலும் குடிநீர் தேவைகளைத் தவிர, நீரூற்று, வாகனம் சுத்தம் செய்வது, கட்டடங்களைக் கட்டுவது போன்றவற்றிற்கு குடிநீரை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறுபவர்களுக்கு ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.