BJP: நான் ஏன் தேர்தலில் போட்டியிடவில்லை...? மனம் திறந்து பேசிய நிர்மலா சீதாராமன்...!
தேர்தலில் போட்டியிடத் தேவையான நிதி தன்னிடம் இல்லை என்பதால் போட்டியிடுவதற்கான வாய்ப்பை தான் நிராகரித்ததாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர்; மக்களவைத் தேர்தலில் போட்டியிடத் தேவையான நிதி என்னிடம் இல்லை என்று கூறி தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை தான் நிராகரித்ததாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக தலைவர் ஜேபி நட்டா தனக்கு ஆந்திரா அல்லது தமிழ்நாட்டில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். ஒரு வார காலம் தேர்தலில் போட்டியிடலாமா என்று யோசித்து விட்டு, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை என்று கூறிவிட்டேன்.
மேலும் எனது சம்பளம், எனது சம்பாத்தியம் மற்றும் எனது சேமிப்பு என்னுடையது, இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியல்ல. தேர்தலில் மற்ற வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்ய போகிறேன். நான் நிறைய ஊடக நிகழ்வுகளில் கலந்து கொண்டு, வேட்பாளர்களுடன் பிரச்சாரத்திற்கு செல்வேன். இன்று ராஜீவ் சந்திரசேகரின் பிரச்சாரத்திற்கு செல்ல உள்ளேன். நான் பிரச்சாரத்தில் இருப்பேன்," என்று கூறினார்.
ஆளும் பாஜக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கும் லோக்சபா தேர்தலில் ஏற்கனவே உள்ள பல ராஜ்யசபா உறுப்பினர்களை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது. இவர்களில் பியூஷ் கோயல், பூபேந்தர் யாதவ், ராஜீவ் சந்திரசேகர், மன்சுக் மாண்டவியா மற்றும் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் அடங்குவர். சீதாராமன் கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.