”அண்ணன் எழுந்தாலே எங்களுக்கு மகிழ்ச்சி தான்”..!! செல்லூர் ராஜூவை கலாய்த்த அமைச்சர் சிவசங்கர்..!!
சென்னை, கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டது. இதை கடந்த டிச.30ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து, கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்ட 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. இதற்கிடையே, பயணிகளுக்கான வசதிகள் செய்துதரப்படாத நிலையில், அவசர கதியில் பேருந்து நிலையம் தொடங்கப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் விமர்சித்தனர்.
இந்நிலையில், சட்டமன்றத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம் இன்று எழுப்பப்பட்டது. சட்டமன்றத்தில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ செல்லூர் ராஜு, "தென் மாவட்ட மக்களுக்காக கேளம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்துவிட்டீர்கள். அங்கு மக்கள் ரொம்ப கஷ்டப்படுறாங்க. சென்னைக்குள் அவர்கள் வருவது மிகவும் சிரமமாக உள்ளது. ஆகவே, இணைப்பு பேருந்துகளை அதிகப்படுத்த வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர், "அண்ணன் செல்லூர் ராஜு எழுந்தாலே எங்களுக்கு மட்டும் அல்ல சட்டமன்றத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். அண்ணன் சொன்னது போல அது கேளம்பாக்கம் பேருந்து நிலையம் அல்ல, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம். முதலில் இந்த தெளிவு வர வேண்டும். போக்குவரத்து நெரிசல் இருக்கிறது என்பதற்காக கிளாம்பாக்கத்தை தேர்வு செய்தது அதிமுக ஆட்சியில்தான். அதிமுகவைப் போல முந்தைய ஆட்சியின் திட்டங்களை அப்படியே கிடப்பில் போடவில்லை. கிளாம்பாக்கம் பேருந்து நிலையப் பணிகளை முழுமையாக நிறைவேற்றியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” என்றார்.