’ரொம்ப ஆபத்து’..!! ’யாரும் வராதீங்க’..!! சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை..!!
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு
தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கையின் சூழலில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கும்பக்கரை அருவிக்கு ஆண்டில் பெரும்பாலான நாட்களில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து நீர்வரத்து இருப்பதால், சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த இரண்டு மூன்று நாட்களாக அப்பகுதியில் மிதமான மழை பெய்து வருகிறது.
இதனால், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து வருகிற மழைநீரின் அளவு குறித்து வனத்துறை ஊழியர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கணக்கிட்டு வருகின்றனர். இந்நிலையில், அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழலை அறிந்த தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட் ராஜன், அருவிப் பகுதியில் குளித்துக் கொண்டிருக்கும் சுற்றுலாப் பயணிகளை பத்திரமாக வெளியேற்றுமாறு உத்தரவு பிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து, அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை வனத்துறையினர் பத்திரமாக வெளியேற்றினர். சுற்றுலாப் பயணிகள் வெளியேறிய ஒரு சில மணி நேரங்களில் அருவிப்பகுதியில் மிகப்பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கும்பக்கரை ஆற்றுப்பகுதியில் உள்ள கிராம மக்கள் ஆற்றை கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ வேண்டாம் என வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் கும்பக்கரை அருவிக்கு வந்து எந்தவித ஏமாற்றமும் அடைய வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.