For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கால்நடைகளுக்கு பரவும் நோய்... உடனே இந்த தடுப்பூசி போட வேண்டும்...! இல்லை என்றால் ஆபத்து

Vaccinate your livestock to prevent the impact of Leprosy in livestock
07:30 AM Aug 15, 2024 IST | Vignesh
கால்நடைகளுக்கு பரவும் நோய்    உடனே இந்த தடுப்பூசி போட வேண்டும்     இல்லை என்றால் ஆபத்து
Advertisement

கால்நடைகளில் இலம்பிதோல் நோய் தாக்கத்தை தடுக்க தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்.

Advertisement

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டத்தில் கால்நடைகளில் தற்போது பரவிவரும் இலம்பிதோல் நோய் (Lumpy Skin Disease) வைரஸ் நச்சுயிரிகளால் ஏற்படும் அம்மை வகையைச் சேர்ந்த நோய் ஆகும். இந்நோய் கொசு, ஈ, உண்ணிக்கடியினால் பாதிக்கப்பட்ட ஒரு மாட்டிடமிருந்து பிறமாடுகளுக்கும், பால் கறப்பவர் மற்றும் கன்றுக்குட்டிகளுக்கு பாதிக்கப்பட்ட மாட்டின் பாலைக்குடிப்பதின் மூலம் மற்றும் நோய் வாய்ப்பட்ட மாடுகளை புதிய இடத்திற்கு கொண்டு வரும் போது இந்நோய் பரவ வாய்ப்புள்ளது.

இந்த நோய் உண்டாக்கும் வைரஸ் கிருமி மாட்டின் தோல் மற்றும் காயங்களில் 18 முதல் 35 நாட்கள் வரை வாழும் தன்மை உடையது. இந்நோய் பாதிக்கப்பட்ட கால்நடைகள் கண்ணிலிருந்து நீர் வடிதல், சளி, கடுமையான காய்ச்சல், மாடுகள் சோர்வாகவும், உடல் முழுவதும் சிறுசிறு கட்டிகளாக வீக்கம் மற்றும் புண்கள் காணப்படும். இக்கட்டிகள் உடைந்து சீழ் வெளியேறும். நிணநீர் சுரப்பிகள் பெரியதாக காணப்படும்.

மேலும் இந்நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகள் தீவனம் சரியாக உட்கொள்ளாததால் எடைகுறைவு, பால் உற்பத்தி குறைதல், சினைப்பிடிப்பதில் பாதிப்புகள், காயங்களினால் தோல் பாதிப்பு ஏற்படுவதுடன் ஒருசில இளம் சினைமாடுகளில் கருச்சிதைவு, மடிநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. நோய் தொற்று அதிக அளவில் ஏற்பட்டாலும் இறப்பு சதவீதம் மிகக் குறைவு ஆகும். இந்நோயுள்ள கால்நடைகளுக்கு வெற்றிலை 10 எண்ணிக்கை, மிளகு 10 கிராம், கல் உப்பு 10 கிராம் மற்றும் தேவையான அளவு வெல்லம் கலந்து அரைத்து ஒரு நாளைக்கு மூன்று முறை நாக்கினில் தடவி கொடுக்கலாம்.

மேலும், வெளிக்காயங்களுக்கு குப்பைமேனி இலை, வேப்பிலை, துளசி இலை, மருதாணி இலை ஒவ்வொரு கைப்பிடி, இதனுடன் மஞ்சள்தூள் 20 கிராம். பூண்டு 10 பல், வேப்பெண்ணெய் 500மி.லி அல்லது நல்லெண்ணெய் 500மி.லி கலந்து கொதிக்க வைத்து பின் ஆறவிட்டு காயங்களை சுத்தப்படுத்திய பின்பு மருந்தைத் தடவ வேண்டும். பாதிக்கப்பட்ட மாடுகளை தனிமைப்படுத்தி பராமரித்தல், மாட்டுக்கொட்டகை மற்றும் சுற்றுப்புற சூழலை சுத்தமாக பராமரித்தல், மாடுகளை பராமரிப்போர் தங்களது கைகளை அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல், மாடுகள் கட்டும் இடத்தில் ஈக்கள். கொசு மற்றும் பூச்சியினங்களை கட்டுப்படுத்தி பராமரிப்பதன் மூலம் நோய் பரவாமல் கட்டுப்படுத்தலாம்.

ஆகையால், இந்நோயின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களது கால்நடைகளை பாதுகாத்திட மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றியும், மேலும். அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களில் கால்நடை உதவி மருத்துவரை நேரில் அணுகி தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement