BREAKING: முன்னாள் பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில் இருவர் விடுதலை...!
மாணவர்களை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி என் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் உதவி பேராசிரியர் முருகன் மட்டும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியை நிர்மலாதேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும், உயர் கல்வித்துறையிலும் செல்வாக்குடன் இருந்தவர். இவர், தேவாங்கர் கல்லூரியில் சில மாணவிகளுக்கு ஆசைவார்த்தைகளைக் கூறி உயர்கல்வித்துறை சேர்ந்தவர்களுக்கு பாலியல் ரீதியாக அவர்களைப் பயன்படுத்த முயன்றிருக்கிறார். இவரால் குறிவைக்கப்பட்ட மாணவிகள், நிர்மலாதேவி பேசியதை ரெகார்ட் செய்து பெற்றோர்கள் மூலம் கல்லூரி நிர்வாகத்தில் புகார் செய்ய, அதை அலட்சியம் செய்தது நிர்வாகம்.
அந்த நேரம், அவர் மாணவிகளிடம் பேசிய போன் உரையாடல், சமூக ஊடகங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் மறைக்கப்படவிருந்த இந்தச் சம்பவம், அருப்புக்கோட்டை தன்னார்வ அமைப்பு, எஸ்.எஃப்.ஐ., ஜனநாயக வாலிபர் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகளின் போராட்டம், நீதிமன்ற வழக்குக்குப் பிறகு போலீஸ் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
இந்த விவகாரத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகி தமிழக அரசியலிலும் புயலை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதற்கிடையே ஆளுநர் மாளிகையும் இந்த வழக்கில் இணைத்துப் பேசப்பட்டதால், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் தனியாக ஒரு விசாரணைக்குழுவை அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்தார்.2018 ஏப்ரலில் நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். இவருடன் சேர்ந்து இந்த குற்றத்தில் ஈடுப்பட்டதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டார்கள்.
மேலும் இந்த வழக்கில் பலர் மீது குற்றச்சாட்டுகளும், பல்வேறு சந்தேகங்களும் எழுந்த நிலையில், கடைசியில் நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் மட்டும்தான் குற்றவாளிகள் என இறுதிசெய்து குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. நீண்ட நாட்கள் சிறையில் இருந்த நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் விசாரணை தாமாதமானது. நிர்மலாதேவிக்காக ஆஜரான வழக்கறிஞர்கள் மாறிவந்த நிலையில், தற்போது அரசே அவருக்கு வழக்கறிஞரை நியமித்திருக்கிறது.
இவர்களுக்கு எதிராக, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபசார தடுப்புச் சட்டம், தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்திய பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தப்பட்டதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது. அனைத்துச் சாட்சிகளும் விசாரிக்கப்பட்ட நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு கடந்த 26-ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அன்றைய தினம் நீதிமன்றத்தில் பேராசிரியர் நிர்மலா தேவி ஆஜராகாததால் இவ்வழக்கின் தீர்ப்பு 29ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் தீர்ப்புகள் வாசிக்கப்பட்டது. இதில் மாணவர்களை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி என் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2வது மற்றும் 3வது குற்றவாளிகளாக குற்றம் சாட்டப்பட்டிருந்த, உதவி பேராசிரியர் முருகன் மட்டும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.