கச்சத்தீவு விவகாரம் -வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
கச்சத்தீவு தொடர்பான 1974 ஒப்பந்தம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெற்ற ஆர்டிஐ தகவலுக்கு பிறகு இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையாகி வருகிறது. இது தொடர்பாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று (திங்கள் கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "1974 ல் இந்தியா - இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி அளிக்கபட்டுள்ளது. இந்திய மீனவர்களின் உரிமைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் 1974 ல் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால், இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிப்பதற்கு 1976 ஆம் ஆண்டு மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக கச்சத்தீவு விவகாரம் குறித்து தொடர்ச்சியாக கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 21 முறை பதில் அளித்துள்ளேன். இந்த பிரச்னை எப்படி உருவானது என்பது மக்களுக்கு தெரிய வேண்டும். கடந்த 20 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் 6,184 இந்திய மீனவர்களுடன், 1,175 மீன்பிடி படகுகளும் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.
கச்சத்தீவு விவகாரத்தை மத்திய அரசு தீர்த்து வைக்க வேண்டிய நிலை இன்று இருந்தாலும் திமுக, காங்கிரஸ் கட்சிகள் தங்களுக்கும் இந்த விவகாரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல அணுகுகின்றன” என்றார். மேலும் மீனவர்களின் விடுதலைக்கான முழு வேலையையும் மத்திய பாஜக அரசு செய்து வருகிறது எனத் தெரிவித்தார்.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் இந்த சூழலில் அரசியல் கட்சிகளின் இந்த எதிரெதிர் விவாதங்கள் சற்று சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது