40 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து!… 12 பேர் பலி!… ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
Accident:சத்தீஸ்கர் மாநிலத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 12 பேர் பலி. உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டம் காப்ரி பகுதி அருகே தனியார் நிறுவன பேருந்து ஊழியர்களை ஏற்றிச்சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு படையினர், விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்து ஊழியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயங்களுடன் 14 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது எக்ஸ் வலைதளத்தில், "சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் பேருந்து விபத்தில் பலர் இறந்த செய்தியால் நான் மிகவும் வருத்தமடைந்தேன். அவர்களை இழந்து வாடும் அனைத்து குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்" என்று அதில் பதிவிட்டுள்ளார்.
இந்த துயர சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதளத்தில், "சத்தீஸ்கர் மாநிலம் துர்க்கில் நடந்த பேருந்து விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். மாநில அரசின் மேற்பார்வையில், உள்ளூர் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதில் ஈடுபட்டுள்ளது" என்று அதில் பதிவிட்டுள்ளார்.
Readmore: சிக்கிய CCTV ஆதாரம்…! தேர்தல் விதி மீறலில் ஈடுபட்ட 106 அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட்…!