Election: தமிழகத்தில் உள்ள 39 தொகுதி தேர்தலை நடத்த ரூ.750 கேட்கும் மாநில தேர்தல் ஆணையம்...!
தேர்தல் தொடர்பான செலவினங்களுக்கு தற்போது வரை ரூ.750 கோடி கேட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டத்தில் தமிழகத்தில் உள்ள 39 மற்றும் புதுச்சேரி என 40 மக்களவை தொகுதிகள், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கு ஒரேநாளில் ஏப்.19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாளை மார்ச் 20-ம்தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனுத்தாக்கலின் கடைசி நாள் மார்ச் 27-ம் தேதியாகும். மார்ச் 28-ம் தேதி மனுக்கள் பரிசீலிக்கப்படும். வேட்பு மனுக்களை மார்ச் 30-ம் தேதி வரை திரும்ப பெறலாம். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக நடைபெறும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனான கூட்டத்தில், மாவட்ட தேர்தல் மேலாண்மை திட்டம் உருவாக்குதல், பாதிக்கப்படும், பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்டவை குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
இதுதவிர, தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த மாநில அரசிடம் 750 கோடி ரூபாய் கோரியது தேர்தல் ஆணையம். 2021 சட்டமன்றத் தேர்தலை விட கூடுதலாக 150 கோடி ரூபாய் கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலின்போது வேட்பாளர்கள் தமிழகத்தில் தேர்தல் செலவு 2019-ல் ரூ.70 லட்சமாக இருந்த நிலையில், தற்போது ரூ.95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.