Red Line |மாத்திரை அட்டையில் வரும் "சிவப்பு கோடு"..! அலர்ட் கொடுத்த மத்திய சுகாதாரத் துறை..!
Red Line: மருந்து அட்டையில் சிவப்புக் கோடு இருந்தால் அவற்றை மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்றும், நீங்களே அம்மருந்துகளை ஒருபோதும் எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இன்றைய காலத்தில் மருந்து மாத்திரை இல்லாமல் ஒரு நாளைக் கூட கடத்த முடியாத நிலைக்கு நம்மில் பெரும்பாலானோர் வந்துவிட்டோம். தலைவலி முதல் நாள்பட்ட நோய்கள் வரை, அனைத்திற்கும் மருந்து மாத்திரைகளே நிவாரணம் அளிக்கின்றன. வழக்கமாக மருத்துவர் எழுதிக் கொடுக்கும் மருந்து சீட்டுகளை மருந்தகத்தில் கொடுத்து நமக்கு தேவையான மாத்திரைகளை வாங்கிக் கொள்கிறோம்.
சிலர் நேரடியாக மருந்தகத்திற்கே சென்று மருந்தின் பெயர்களை கூறி வாங்கிக் கொள்கிறோம். நாம் மாத்திரை வாங்கும் போது அதில் இருக்கும் குறியீடுகள், லேபிள்களை கவனிப்பதில்லை. குறிப்பாக மாத்திரை அட்டைகளில் சிவப்பு கோடு இருப்பது, எதனை குறிக்கிறது என்று நம்மில் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை, இந்நிலையில் மாத்திரை அட்டையில் உள்ள சிவப்பு நிற கோடு எதை குறிக்கிறது என்று மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுரையில், பொதுவாக, ஆண்டிபயாடிக் மாத்திரைகளில்தான், இதுபோல் சிவப்புக்கோடுகள் இருக்கும். மருத்துவர் பரிந்துரைத்த அளவு மற்றும் மாத்திரைகளை உட்கொள்ளுங்கள், உங்களுக்கு தேவைப்பட்ட போதெல்லாம், நீங்களாகவே இந்த மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளாதீர்கள், குறிப்பாக சிவப்புக் கோடு உள்ள மருந்துகளை எடுத்துக்கொள்வதற்கு முன், மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெறுவது அவசியம் என தெரிவித்துள்ளது.