"ரெட் கார்ட் போடப்பட்டுள்ள நிலையில் சிம்பு எப்படி நடிக்கலாம்" - புகார் அளித்த பிரபலம்.. தக் லைஃப் படத்திற்கு எழுந்துள்ள சிக்கல்!
நடிகர் சிம்புவிற்கு ரெட் கார்டு போடப்பட்டுள்ள நிலையில், தக் லைஃப் படத்தில் எப்படி நடிக்கலாம் என பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்லைஃப்’ படத்தில் சிம்பு ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, அது குறித்த வீடியோவும் வெளியானது. இந்த நிலையில் ’தக்லைஃப்’ படத்தில் சிம்பு நடிக்க கூடாது என தயாரிப்பாளர் சங்கத்தில் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாக இருந்த ’கொரோனா குமார்’ என்ற படத்தில் ஒப்புக்கொண்டபடி சிம்பு நடித்து முடிக்கவில்லை என கூறியுள்ள ஐசரி கணேஷ் ’கொரோனா குமார்’ படத்தை முடிக்காத சிம்புவுக்கு ரெட் கார்டு போடப்பட்டுள்ளதாகவும், எனவே கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் ’கொரோனா படத்தில் சிம்பு நடிக்க கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். இந்தப் படத்திற்காக சிம்புவுக்கு ரூ. 9.5 கோடி சம்பளம் பேசப்பட்டு, ரூ. 4.5 கோடி அட்வான்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சிம்பு படத்தில் நடித்துக் கொடுக்க நேரம் கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
’கொரோனா குமார்’ படத்தை முடிக்காமல் சிம்பு வேறு படத்தில் நடிக்க கூடாது என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் ரெட் கார்ட் போடப்பட்டுள்ள நிலையில் சிம்பு எப்படி நடிக்கலாம் என்றும் சிம்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஐசரி கணேஷ் கடிதம் எழுதியுள்ளார். மேலும், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது சிம்புவின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதனால், ‘தக் லைஃப்’ படத்திற்கு மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.