வெடித்து சிதறிய விமானம்!. பயணித்த அனைவருமே பலியான சோகம்!. கருப்புப்பெட்டி கண்டுபிடிப்பு!
Brazil Plane Crash: பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்தில் 61 பேருடன் சென்ற விமானம் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவருமே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்தில் வியோபாஸ் விமானமான 2283 என்ற விமானம் 61 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. வின்ஹெடோ நகரில் சென்று கொண்டிருந்த போது விமானம் நிலை தடுமாறி கீழே விழுந்து வெடித்ததை உள்ளூர் தீயணைப்புப் படை உறுதிசெய்துள்ளனர். மேலும், விமானம் விபத்துக்குள்ளாவதற்கு சில நிமிடங்களுக்கு முன் கட்டுப்பாடில்லாமல் சுழலன்று கீழே விழுந்து வெடித்து சிதறிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் விமானம் விபத்துக்குள்ளானதில் அந்த இடமே தீப்பிளம்பாக மாறியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 61 பேரும் உயிரிழந்ததாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏனெனில் விமானம் விழுந்த வேகத்தில் வெடித்து சிதறியது. அதில் ஏற்பட்ட தீப்பிளம்பு காண்போரை கண்ணீரில் ஆழ்த்தி உள்ளது.
58 பயணிகள் மற்றும் விமானிகள் மற்றும் பணியாளர்கள் என 61 பேருடன் சாவ் பாலோவின் சர்வதேச விமான நிலையமான குருல்ஹாஸ் (Guarulhos) நோக்கிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானத்தின் கருப்புப் பெட்டியை அதிகாரிகள் மீட்டுள்ளனர், மேலும் விபத்து வானிலை தொடர்பானது அல்ல என முதற்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் உறுதியான முடிவுகள் மேலும் விசாரணைக்காக காத்திருக்கின்றன. எஞ்சின் செயலிழப்பு ஒரு சாத்தியமான காரணம் என நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை அறிந்த பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.
தெற்கு பிரேசிலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம் விபத்து குறித்து தகவல் தெரிவித்த நிலையில், அங்கிருந்தவர்களிடம் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு கோரிக்கை வைத்தார். இந்த விபத்து குறித்து விசாரணையும் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: சீன துறைமுகத்தில் கப்பல் வெடித்து விபத்து!! 1 கி.மீ. தொலைவுக்கு நில அதிர்வு ஏற்பட்டதால் பரபரப்பு..!!