சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டம்...! இன்று விசாரணைக்கு வரும் வழக்கு...
யூடியூபர் சவுக்கு சங்கரைக் காவலில் எடுத்து விசாரிக்க கோரி கோவை நகர போலீஸார் மாவட்ட ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பெண் காவலர்களை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி, மே 4ஆம் தேதி தேனியில் இருந்து சைபர் கிரைம் பிரிவு போலீஸார் அவரைக் கைது செய்தனர். கோவை மாநகர சைபர் க்ரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா அளித்த புகாரின் அடிப்படையில், ஐபிசி பிரிவுகள் 294-பி (தகாத வார்த்தைகளில் பேசுதல்), 509 (பெண்களை அவதூறாகப் பேசுதல்), 353 (அரசு ஊழியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி அவர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல்) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 பிரிவு 67 (தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் சவுக்கு சங்கர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
அவர் மே 17 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். தற்பொழுது கோவை மத்திய சிறையில் உள்ளார். இதனிடையே, அவரை மேலும் விசாரணைக்காக காவலில் வைக்க கோரி கோவை நகர போலீஸார் மனு தாக்கல் செய்தனர். இந்த காவல் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
கஞ்சா வழக்கு :
தேனியில் சவுக்கு சங்கரை கைது செய்தபோது, அவருடன் இருந்த இருவரிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர்கள் கஞ்சா வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. சவுக்கு சங்கரின் காரில் இருந்த அரை கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர், சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாக பழனிசெட்டிபட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.