OPS: இரட்டை இலை சின்னத்தில் போட்டி உறுதி...! அது எப்படி என்பது பரம ரகசியம்...? பரபரப்பு கிளப்பிய ஓ.பி.எஸ்
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது உறுதி என ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.
அதிமுக உறுப்பினர் சூரியமூர்த்தி, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இவர், கடந்த 2017-ம்ஆண்டு சசிகலா பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது, அதிமுக ஒருங்கிணைப்பாளர்களாக ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது, பின்னர் பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது ஆகியவற்றை எதிர்த்து சென்னை மாநகர சிவில் நீதிமன்றத்தில் இவர் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலின்போது, தேர்தல் ஆணையத்தில் சூரியமூர்த்தி ஒரு மனு அளித்திருந்தார். தான் ஏற்கெனவே தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ள சூழலில், பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கூடாது என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
அதேபோல, வரும் மக்களவை தேர்தலிலும் பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்ககூடாது என்று தேர்தல் ஆணையத்தில் சூரியமூர்த்தி கடந்த பிப்ரவரி 12-ம் தேதி மீண்டும் மனு அளித்தார். இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இரட்டை இலை சின்னம் விவகாரத்தில், கட்சிக்கு தொடர்பு இல்லாதவர் தாக்கல் செய்துள்ள மனுவை நிராகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் அதிமுக தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நேற்று சென்னையில் நடந்த இப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம்; வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது உறுதி. அது எப்படி என்பது பரம ரகசியம் என தெரிவித்துள்ளார்.