நாடே எதிர்பார்க்கும் Lok Sabha தேர்தல் தேதி இன்று அறிவிப்பு..!! தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமல்..!!
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று மதியம் அறிவிக்க உள்ளது.
இந்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. மாநிலங்கள் வாரியாக தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கிடையே தான் இந்திய தேர்தல் ஆணையத்தில் தேர்தல் ஆணையராக இருந்த அனுப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி ஓய்வு பெற்றார். அதன்பிறகு கடந்த 9ஆம் தேதி தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை ஒரு தலைமை தேர்தல் ஆணையர், 2 தேர்தல் ஆணையர்கள் இருப்பார்கள். ஆனால் பணி ஓய்வு, ராஜினாமா உள்ளிட்டவற்றால் இரண்டு தேர்தல் ஆணையர்களும் இல்லாத நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே பொறுப்பில் இருந்தார். இதனால் திட்டமிட்டப்படி தேர்தல் தேதி அறிவிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் தான் பிரதமர் தலைமையில் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், எஸ்எஸ் சந்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு ஜனாதிபதியும் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்நிலையில் தான் இன்று லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வழக்கமாக இந்தியா முழுவதும் பல்வேறு கட்டங்களாக லோக்சபா தேர்தலை நடத்தி ஒரே நாளில் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும். அதன்படி, இன்று மதியம் 3 மணிக்கு லோக்சபா தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் அறிவிக்கவுள்ளார். பொதுவாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாடு முழுவதும் அமலுக்கு வரும். இதையடுத்து அரசின் புதிய திட்டங்கள், புதிய அறிவிப்புகள் என்பது லோக்சபா தேர்தல் முடியும் வரை செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியாது. இதன்மூலம் இன்று முதல் எந்த புதிய திட்டங்களையும் மத்திய, மாநில அரசால் செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.