உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்த விவகாரம்…! அதிரடி காட்டும் சுகாதாரத்துறை..! 2 நாட்களில் அறிக்கை..!
சென்னையில் உடல் பருமன் சிகிச்சையின் போது புதுச்சேரியை சேர்ந்த இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறிய நிலையில் 2 இணை இயக்குனர்கள் கொண்ட விசாரணை குழுவை அமைத்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரைச் சேர்ந்தவர் செல்வநாதன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகரான இவர், மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு ஹேமசந்திரன், ஹேமராஜன் என இரட்டை ஆண் பிள்ளைகள் உள்ளனர். இதில் ஹேமசந்திரன் (வயது 26) பி.எஸ்.சி. ஐ.டி. முடித்து விட்டு டிசைனராக வேலை செய்து வந்தார். இவர் உடல் பருமன் காரணமாக சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் உடல் பருமனை குறைக்க கடந்த 23ஆம் தேதி ஹேமசந்திரனுக்கு கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டதால் ஹேமசந்திரன் இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இதனால், அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில், மருத்துவமனை நிர்வாகம் மீது புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே மகனை பறிகொடுத்த செல்வநாதன், முதல்வர் ஸ்டாலினுக்கு மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயிரிழந்த இளைஞரின் உறவினர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை குழு அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என்றும் உறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 2 இணை இயக்குனர்கள் கொண்ட விசாரணை குழுவை அமைத்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்பிக்க விசாரணை குழுவுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என பெற்றோருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் நடவடிக்கை.