Rain | 'கொட்டித்தீர்க்கும் கனமழை' - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்!!
தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் ஆகிய 2 தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் நேற்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் , திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் என வானிலை மையம் அறிவித்து இருந்தது.
அதேப்போன்று இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது. மேலும் சென்னையில் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் ஆகிய 2 தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.
Read more ; சட்டப்பேரவை இடைநீக்கம் | அதிமுக சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம்!