”அந்த அமைச்சர் எங்களுக்கு எதுவுமே செய்யல”..!! உதயநிதியிடம் போட்டுக் கொடுத்த திமுக நிர்வாகிகள்..!!
திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையிலும், கட்சி நிர்வாகிகள் பலர் மகிழ்ச்சியாக இல்லை என்பதை தொகுதி வாரியாக நடத்தும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்கள் மூலம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிந்து கொண்டார்.
அண்மையில் நடைபெற்ற நெல்லை நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் 2 ஒன்றியச் செயலாளர்கள் அமைச்சர்கள் எதுவுமே செய்து கொடுப்பதில்லை என மிகவும் துணிச்சலாக அமைச்சர்கள் நேரு, தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, ஆகியோரது முன்னிலையிலேயே உதயநிதியிடம் புகார் கூறியிருக்கின்றனர். உடனே அமைச்சர் நேரு, தனக்கே உரிய பாணியில் யாருய்யா அது, எந்த அமைச்சர்யா என டென்ஷன் ஆனதாகவும், ஆனாலும் தாங்கள் சொல்வது உண்மை என உதயநிதியிடம் நிர்வாகிகள் உறுதியாக நின்றதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு கட்டத்தில் அமைச்சர் நேரு துருவி துருவி கேட்டதால், வேறு யாருமல்ல வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அண்ணாச்சி தான் என தாங்கள் கொடுத்த கோரிக்கை மனுவை செய்து கொடுக்கவில்லை என நிர்வாகி ஒருவர் போட்டு உடைத்திருக்கிறார். இதையடுத்து, இறுக்கமான சூழல் இருப்பதை உணர்ந்த நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். சொல்வது அவர் மாவட்டத்திலேயே எதுவும் நடக்கமாட்டேங்குது, எல்லாம் அதிகாரிகள் பார்த்துக் கொள்கிறார்கள் எனப் பேசி நிலைமையை மாற்றிவிட்டார்.
ஆனால், சைலண்டாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த விவகாரத்தை குறித்து வைத்துக்கொண்டார். கீழ்மட்ட நிர்வாகிகள் சந்தோஷமாக இல்லையென்றால் அது தேர்தலில் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும் என்பதை மிகவும் சீரியஸான விஷயமாக பார்க்கத் தொடங்கியிருக்கிறார் உதயநிதி. இதனால் முதல்வர் வெளிநாடு பயணத்தை முடித்து ஊர் திரும்பியதும் நிர்வாகிகள் புகாருக்குள்ளான அமைச்சர்களுக்கு கடும் டோஸ் விழக் கூடும் எனத் தெரிகிறது.