சோபோர் என்கவுன்டரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என தகவல்!
சோபோரில் கொல்லப்பட்ட இரண்டு பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டதாகவும், ஒரு மாதத்திற்கு முன்பு வடக்கு காஷ்மீரில் தங்கி இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீநகர், ஜம்மு - காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபூர் பகுதியை சேர்ந்த செக் மொஹல்லா நவ்போராவில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இந்நிலையில் இரவானதால் துப்பாக்கி சண்டை நிறுத்தப்பட்டது. நேற்று காலை மீண்டும் துவங்கிய இந்த துப்பாக்கி சண்டையில், பாதுகாப்பு படையினர் சுட்டதில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த மோதலில் இரண்டு ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் காயமடைந்த இரு ராணுவ வீரர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த பயங்கரவாதிகள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது.
இந்நிலையில், பிஓகேயில் உள்ள மிர்பூரைச் சேர்ந்த சனம் ஜாபர் மற்றும் பாகிஸ்தானின் ராவல்பிண்டியைச் சேர்ந்த அப்துல் வஹாப் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கிடைத்த ஆதாரங்களின்படி, அவர்கள் ஒரு மாதத்திற்கு முன்பு வடக்கு காஷ்மீரில் உள்ள சோபூரை அடைந்தனர்.
எனினும், அவர்கள் எல்லைக்கு அப்பால் இருந்து எப்படி இப்பகுதிக்கு வந்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவர்களது தொலைபேசிகளில் இருந்து படங்களை ஆய்வு செய்த அதிகாரிகள், சோபோர் நகரத்திற்கு வருவதற்கு முன்பு இருவரும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்த வடக்கு காஷ்மீர் காட்டில் சில காலம் வாழ்ந்ததாக கூறப்படுறது.