புதிய உச்சம்...! தமிழகத்தின் மின் தேவை 20,583 மெகாவாட் என்ற அளவில் உயர்வு...!
தமிழகத்தின் மின்சாரத் தேவை 20,583 மெகாவாட் என்ற அளவில் உயர்ந்துள்ளது.
வெப்ப அலையின் கீழ் தமிழகம் தத்தளித்து வரும் நிலையில் வீடுகளில் ஏசி பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் மின்சாரத் தேவை 20,583 மெகாவாட் மற்றும் தினசரி ஆற்றல் நுகர்வு 451.791 மில்லியன் யூனிட் என்ற வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது என மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இருந்த மின் நுகர்வுடன் ஒப்பிடும்போது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், அதிகப்படியான மின் நுகர்வு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் 20ஆம் தேதி 19,387 மெகாவாட்டாக இருந்த உச்சபட்ச மின்தேவை ஏப்ரல் 26ஆம் தேதி 20,583 மெகாவாட்டாக 1,196 மெகாவாட் அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி 20,341 மெகாவாட்டாக இருந்தது. இரவு நேரங்களில் மின்வெட்டை தவிர்க்க, துணை மின்நிலையங்களில் அதிக மின் உற்பத்தியை தவிர்க்க கூடுதல் மின்மாற்றிகளை நிறுவியுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
மேலும் மின்மாற்றிகளின் சுமையை கண்காணித்து, கூடுதல் திறன் அமைக்க வேண்டிய பகுதிகளை கண்டறிந்து, சென்னையில் நங்கநல்லூர், தில்லைகங்கா நகர் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் கூடுதல் மின்மாற்றிகளை நிறுவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.