TN Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம்?... மீண்டும் அமைச்சராக பதவியேற்கும் பொன்முடி!
TN Cabinet: திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் இல்லை என்றும் பொன்முடி எம்.எல்.ஏ.வாக தொடர்கிறார் என்றும் தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, மீண்டும் அவர் அமைச்சராக பதவியேற்பது உறுதியாகியுள்ளதால் தமிழக அமைச்சரவையில் இலாக்கா மாற்றப்படவுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற பொன்முடி, இதை எதிர்த்து மேல்முறையீட்டுக்கு உச்சநீதிமன்றம் சென்றார். இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை தொடர்ந்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, பொன்முடி இழந்த திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை பெற்றார். இதற்கான உத்தரவை சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக பொன்முடி தொடர்கிறார் என்றும் திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் இல்லை என்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்தார்.
இதையடுத்து, பொன்முடிக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம்பெற செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின், உடனடியாக நடவடிக்கை எடுத்துவருகிறார். இதன் தொடர்ச்சியாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எழுதிய கடித்தத்தில் உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, தண்டனையை நிறுத்திவைத்துள்ளது. இதன் அடிப்படையில், பொன்முடி மீது எந்த தண்டனையும் இல்லை என்பதால், அவரை மீண்டும் அமைச்சராக்க ஆளுநர் பதவி பிரமாணம் செய்துவைக்க வேண்டும் என்றும் முதல்வர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த கடிதத்திற்கு ஆளுநர் மாளிகை இதுவரை எந்த பதிலும் வெளியிடவில்லை. இருப்பினும், கடந்த 14ம் தேதி அன்று ஆளுநர் திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டார். 3 நாட்கள் கழித்து தமிழகம் திரும்புவார் என்றும் பொன்முடி மீண்டும் அமைச்சராவது குறித்து உள்துறை அமைச்சரிடம் ஆலோசனை செய்ய சென்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில், ஆளுநர் சென்னை திரும்பியதும், பொன்முடி பதவியேற்பது உறுதியாகியுள்ளதாகவும், இதனால் அமைச்சரவையில் இலாக்கா மாற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.
Readmore:M.K.Stalin: இன்று காலை 9.40 மணிக்கு மும்பை செல்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்…!