For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தண்ணீர் பஞ்சத்தை சந்திக்கும் தென்னிந்தியா!… நீர்த்தேக்கங்களின் அளவு 17% ஆக குறைந்ததால் கவலை!

05:20 AM Apr 28, 2024 IST | Kokila
தண்ணீர் பஞ்சத்தை சந்திக்கும் தென்னிந்தியா … நீர்த்தேக்கங்களின் அளவு 17  ஆக குறைந்ததால் கவலை
Advertisement

Water level: கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், தென்னிந்தியாவில் அணைகளில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 17 சதவீதம் அளவுக்கு நீர் மட்டம் சரிந்துள்ளதாக மத்திய அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

Advertisement

இந்த ஆண்டு வெயிலின் வெப்பம் பிப்ரவரி மாதம் முதலே தொடங்கிவிட்டது. தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. ஏப்ரல் மாதம் முடிவதற்குள்ளாகவே வெயிலின் வெப்பம் தாங்க முடியாததாக இருக்கிறது. பல ஏரிகள், சிறிய அளவிலான நீர்நிலைகள் வேகமாக வறண்டு வருகின்றன. இன்னும் மே மாதம் என்ன ஆகுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

தொடர்ந்து, கொளுத்தி வரும் வெயிலால், சென்னையில் இந்த ஆண்டு குடிநீர் பிரச்னை ஏற்படுமா என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன. ஏனென்றால், சென்னையில் உள்ள புழல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, பூண்டி ஏரி ஆகியவை முக்கிய குடிநீர் ஆதாரங்களாக உள்ளன. இதேபோல், மேட்டூர் அணையின் நீர்மட்டமும் 55 அடிக்கு கீழாக குறைந்துள்ளது. தற்போது குடிநீர் தேவைக்காக மட்டுமே அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. ஆங்காங்கே குடிநீர் தட்டுப்பாடும் நிலவிவருகிறது.

இந்தநிலையில், மத்திய நீர் ஆணையம் (சி.டபிள்யூ.சி.) நேற்று வெளியிட்ட தரவுகளின்படி, தென்னிந்தியா நீர் நெருக்கடியை எதிர்கொள்கிறது. ஏனெனில் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு வெறும் 17 சதவீதமாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நீர் இருப்பு 29 சதவீதமாகவும், கடந்த 10 ஆண்டுகளில் இதே காலகட்டத்தில் சராசரி நீர் இருப்பு 23 சதவீதமாகவும் இருந்தது.

தென்னிந்தியாவில் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மொத்தம் 43 அணைகள் உள்ளன. இந்தியா முழுவதும் உள்ள முக்கியமான 150 அணைகளில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நீர் இருப்பு 82 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த அணைகளில் 64.775 பில்லியன் கன மீட்டர் (பிசிஎம்) நீர் இருப்பு இருந்தது. இந்த ஆண்டு, இது கடந்த 25ம் தேதி நிலவரப்படி 53.775 பிசிஎம் ஆக உள்ளது.

கடந்த 10 ஆண்டு நேரடி நீர் சேமிப்பின் சராசரி 55.523 பிசிஎம் ஆகும். தென் இந்தியாவை தவிர, மேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் உள்ள நீர்த்தேக்கங்களில் உள்ள நீர் இருப்பு வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவுடன் ஒப்பிடும்போது நேரடி சேமிப்புத் திறனில் அதிக பற்றாக்குறை உள்ளது. வரும் ஜூன் - செப்டம்பர் மாதங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் போது நீர் பற்றாக்குறை நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பிடத்தக்க வகையில், பிரம்மபுத்திரா, நர்மதா மற்றும் தபி போன்ற ஆற்றுப் படுகைகள் இயல்பை விட சிறந்த சேமிப்பு அளவைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது, அதேசமயம் காவிரி மற்றும் மகாநதி மற்றும் பெண்ணாறு இடையே கிழக்குப் பாயும் ஆறுகள் போன்றவை சேமிப்பு திறனில் பற்றாக்குறையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: Amit Shah | “இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்…” உள்துறை அமைச்சர் அமித் ஷா சர்ச்சை பேச்சு.!!

Advertisement