என்னது மரத்தை கட்டித் தழுவ இவ்வளவு ரூபாயா? எங்கனு தெரிஞ்சுக்கனுமா? இதை படிங்க..
பெங்களூரில் உள்ள ”தீ ஹீலிங் பவர் ஆஃப் ஃபாரஸ்ட்” என்னும் சுற்றுலா தளத்தில் மரங்களை கட்டித் தழுவுவதற்கு ரூ.1500வரை வசூல் செய்து வருகின்றனர்.
இன்றைய காலத்தில் பணி புரியும் மக்களின் மன அழுத்தங்கள், வாழ்க்கை நடைமுறைகள், வேலைப் பளு போன்றவற்றை குறைக்கும் விதமாக அவர்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் விதமாக பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனம் காடுகளின் அனுபவத்தை தருகிற விதத்தை ”தீ ஹீலிங் பவர் ஆஃப் ஃபாரஸ்ட்” எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறது.
இந்த நிறுவனத்தின் மூலம் கடுமையான பணிச் சூழலில் பணிபுரியும் பணியாளர்களின் மன அழுத்தங்களை குறைக்கவும், ஆறுதல் மற்றும் மன அமைதியை ஏற்படுத்தவும் அவர்கள் பெங்களூருவில் உள்ள கப்பன் பூங்காவிற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அங்குள்ள பூங்காவில் அவர்கள் மரங்களை கட்டித் தழுவ ரூ.1500 வரை கட்டணமாக வசூலிக்கிறார்கள்.
இந்த வித்தியாசமான நிகழ்ச்சி குறித்து இதனை ஒருங்கிணைக்கும் நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது, "நகரத்தில் நமது அன்றாட வாழ்க்கை மிகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இதிலிருந்து விலகி மன அமைதியை தருகிற விதமாக இயற்கையுடன் மீண்டும் இணைவதற்கான நேரத்தையும் இடத்தையும் கண்டுபிடிப்பது நகரத்தில் மிகவும் சவாலான ஒன்று.
இதற்குதான் ஜப்பானியக் கலையான வனக் குளியல் என்பது ஒரு நல்ல அனுபவமாகும். இது காடுகளுக்குள் ஒரு ஆழ்ந்த, அமைதியான மற்றும் ஆத்மார்த்தமான நடைப்பயிற்சியாகும். இதன்மூலம் நீங்கள் புத்துணர்வுடன் இருப்பதைப் போல் உணர்வீர்கள் “ எனக் கூறியுள்ளார்.